தமிழுக்கு ரூ.74 கோடி.. யாரும் பேசாத சமஸ்கிருதத்துக்கு ரூ.1,488 கோடி.. மத்திய அரசு ஒதுக்கீடு
சென்னை: தமிழ்நாடு உட்பட உலகம் முழுவதும் சுமார் 10 கோடி பேர் பேசும் தமிழ் மொழியை ஆராய்ச்சி செய்யும் மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு ரூ.74.1 கோடி ஒதுக்கி இருக்கும் மத்திய அரசு, யாராலும் பேசப்படாத சமஸ்கிருத மொழிக்கு ரூ.1,487.9 கோடியை ஒதுக்கீடு செய்து இருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
நாடு முழுவதும் மத்திய பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளை திணித்து வருவதாக தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக மாநிலங்களில் இயங்கி வரும் வங்கிகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், தபால் நிலையங்கள் போன்ற மத்திய அரசின் நிறுவனங்களில் இந்தி மொழி திணிக்கப்படுவதாக புகார் உள்ளது.

இந்தி திணிப்பு
இந்தி மொழியை திணிப்பது சமஸ்கிருதத்தை மக்கள் புழக்கத்திற்கு மீண்டும் கொண்டு வரும் முயற்சி என்றும் குற்றம்சாட்டி வந்தனர் மொழி ஆர்வலர்கள். குறிப்பாக தமிழ்நாட்டில் இந்தி, சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக வலுவான குரல்கள் ஒலித்தன. தமிழ்நாடு கோயில்களில் சமஸ்கிருதத்தில் மந்திரம் ஓதப்பட்டு வந்த நிலையில், தமிழிலும் அர்ச்சனை செய்யும் முறை கொண்டு வரப்பட்டது.

சமஸ்கிருத திணிப்பு
இது ஒருபுறம் இருக்க அண்மையில் மத்திய அரசு உத்தரப்பிரதேச மாநில வாரணாசியில் நடத்திய காசி - தமிழ் சங்கமம் நிகழ்ச்சியும் சமஸ்கிருதத்தை தமிழர்கள் மத்தியில் திணிக்கும் முயற்சி என்று குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. திராவிட கழகம், தமிழ் அமைப்புகள், அம்பேத்கரிய, கம்யூனிஸ்ட் இயக்கங்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

மொழி வளர்ச்சி நிறுவனங்கள்
அதேபோல் சமஸ்கிருதத்தை வளர்க்கும் வகையில் மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தை தொடங்கி நடத்தி வருகிறது மத்திய அரசு. அதேபோல் அனைத்து பிராந்திய மொழிகளை வளர்க்கும் வகையிலும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் மற்ற மொழிகளை விட சமஸ்கிருதம், இந்தி மொழிகளை வளர்க்க மத்திய அரசு கூடுதல் நிதியை செலவிட்டு வருவதாக கூறப்பட்டு வந்தது.

எம்பி ஜோதிமணி கேள்வி
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, சமஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். அதில், கோடிக்கணக்கான மக்களால் பேசப்பட்டு வரும் தமிழை விட மக்களிடம் பேச்சு புழக்கத்தில் இல்லாத சமஸ்கிருதத்திற்கு பன்மடங்கு அதிக நிதி ஒதுக்கி இருப்பது தெரியவந்து உள்ளது.

மத்திய அமைச்சர் பதில்
மத்திய கல்வித்துறை இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார், கரூர் எம்பி ஜோதிமணிக்கு அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 2014 - 2015 கல்வியாண்டு முதல் கடந்த 2021 - 2022 கல்வியாண்டு வரை மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கும், மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்திற்கும் ஒதுக்கிய நிதி விபரங்கள் இடம்பெற்று உள்ளன.

தமிழை விட சமஸ்கிருதத்துக்கு அதிக நிதி
அதில், கடந்த 2014 ஆண்டு முதல் மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கும் மத்திய அரசு ரூ.74.1 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்து இருக்கிறது. ஆனால், மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்திற்கு ரூ.1,487.9 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. தமிழ்நாடு மாநிலம், புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆங்காங்கே பேசப்பட்டு வரும் தமிழை விட வழக்கொழிந்த சமஸ்கிருதத்துக்கு கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்கி வரும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications