கூட்டம், கூட்டமாக சென்னை திரும்பும் மக்கள்.. ரயில்களில் கூட்டம்.. சுங்கச் சாவடிகள் பிஸி!
சென்னை: ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னைக்கு பிற மாவட்டங்களிலிருந்து அதிக மக்கள் திரும்பி வருவதற்கு தொடங்கியுள்ளனர்.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஆரம்பத்தில் சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு கெடுபிடி அதிகமாக இருந்தது.
மளிகை கடைகள், காய்கறி கடைகள் கூட திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

வீடுகளுக்கு சென்று சப்ளை
வீடுகளுக்கே சென்று மளிகை கடை, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. காய்கறிகள் வழங்கப்பட்டன, பழங்களும் வீடுகளுக்கே கொண்டுசென்று கொடுக்கப்பட்டன. இதன் பிறகு சற்று தளர்வு கொடுக்கப்பட்டு மளிகை கடைகள் திறக்கப்பட்டன. பிறகு இறைச்சி கடைகள் திறக்கப்பட்டன. படிப்படியாக பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு, தற்போது, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மிக அதிக தளர்வுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

சொந்த ஊர்களில் மக்கள்
அதேநேரம், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்பட 11 மாவட்டங்களில் அதிகப்படியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முதலில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதும் சென்னை நகரில் இருந்து பல லட்சம் மக்கள் தங்களது சொந்த மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்து சென்று விட்டனர். இப்போது அவர்கள் வசிக்கும் மாவட்டங்களில் கெடுபிடி அதிகமாகவும் சென்னையில் தளர்வுகள் அதிகமாகவும் இருப்பதால் தொழில்கள் மற்றும் பணி நிமித்தமாக அவர்கள் சென்னைக்கு திரும்ப தொடங்கியிருக்கிறார்கள்.

ரயில்களில் கூட்டம்
இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களில் சென்னைக்கு செல்லக்கூடிய ரயில்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. சொந்த வாகனங்களில் சென்னை நோக்கி வருவோர் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதாக சுங்கச்சாவடிகளில் பணியாற்றக்கூடியவர்கள் நம்மிடம் தெரிவிக்கிறார்கள்.

சுங்கச் சாவடிகளில் அதிக வாகனங்கள்
வழக்கத்தை விட நான்கு மடங்குக்கும் அதிகமாக சுங்கச்சாவடிகளில் தற்போது வாகனங்கள் வருகை இருக்கிறது என்று பரனூர் சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர் நம்மிடம் தெரிவித்தார். சென்னைக்கு வரக்கூடிய மக்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிப்பதால் தலைநகரம் களை கட்ட தொடங்கியுள்ளது. மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது.

வணிகர்கள் வருகை
மளிகை கடை வைத்திருப்பவர்கள் பிற தொழில் செய்பவர்கள் சென்னையில் இப்போது கடையைத் திறந்து தங்களது வணிக நிறுவனங்களை இயக்கிக் கொண்டு முடியும் என்பதால் அவர்கள் ஆர்வத்தோடு சென்னை நோக்கி திரும்ப தொடங்கியுள்ளனர். அதேநேரம் சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு அரசு வழிகாட்டும் அனைத்துத் வழிமுறைகளையும் ஏற்று நடந்தால், மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் நிலை வராது என்பது நிச்சயம்.












Click it and Unblock the Notifications