அம்மா, மகளுக்கு பாலியல் தொல்லை..பாஜக பிரமுகர் மீது கோக்சோ பாய்ந்தது - தலைமறைவான நபரை தேடும் போலீஸ்
15 வயது சிறுமிக்கும் அவரது அம்மாவிற்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பாஜகவின் வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த பிரமுகர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.
சென்னை: பாஜக பிரமுகர் பார்த்தசாரதி எதிர்வீட்டைச் சேர்ந்த பெண்ணுக்கும் அவரது 15 வயது மகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதை அடுத்து அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான பார்த்தசாரதியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை எருக்கஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி, 55 வயதாகும் இவர் பாஜகவில் பெரம்பூர் கிழக்குபகுதி வழக்கறிஞர் பிரிவு தலைவராக இருந்து வருகிறார். இவர் தனது எதிர்வீட்டில் வசித்து வந்த சித்ரா என்ற பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தார் என்பது புகார்.
கடந்த 2018ஆம் ஆண்டு தன்னிடம் பார்த்தசாரதி தவறாக நடந்து கொண்டதாக சித்ரா புகாரின் பேரில் கொடுங்கையூர் காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். சிறை சென்ற பார்த்தசாரதி ஜாமீனில் வெளியே வந்தார். தனக்கு எதிராக புகார் அளித்த சித்ராவிடம் மீண்டும் வாலாட்ட தொடங்கினார்.

மீண்டும் புகார்
இதனையடுத்து சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அந்த பெண் புகார் ஒன்றை அளித்தார். அதில் வழக்கறிஞர் பார்த்தசாரதி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், இதுகுறித்து தான் ஏற்கனவே புகார் அளித்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்திருந்துள்ளார்.

தொடர் தொல்லைகள்
தற்போது மீண்டும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதோடு தனது மகளுக்கும் அவர் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக சித்ரா தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

டார்ச்சர் செய்யும் பார்த்தசாரதி
நாங்கள் எங்கள் வீட்டு வாசலில் இருந்தால் தகாத வார்த்தைகளால் திட்டி, உங்கள் மீது வழக்கு போட்டு உள்ளே தள்ளாமல் விடமாட்டேன் என்று மிரட்டுவாராம் பார்த்த சாரதி. நானும் என் மகள்களும் எங்கள் வீட்டு வாசலில் கோலம் போடும் போதெல்லாம் அவர் வீட்டு ஜன்னலில் இருந்து போட்டோ எடுத்து தொந்தரவு செய்வார்.

முதல்வர் தனி பிரிவுக்கு புகார்.
இது சம்பந்தமாக என் கணவர் அவரை கேட்டபோதெல்லாம் அவரையும் மிரட்டுவார். எனவே, உடனடியாக பார்த்தசாரதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது மனுவில் தெரிவித்திருந்தார். பாஜக பிரமுகர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், தன் குடும்பத்துக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோரி, முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் சித்ரா மனு அளித்திருந்தார்.

வழக்குப்பதிவு
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் பார்த்தசாரதி மீதான குற்றசாட்டு உறுதியானது. இதைத்தொடர்ந்து பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தல், ஆபாசமாகத் திட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தேடும் போலீஸ்
தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க பார்த்தசாரதி தலைமறைவானார். இதனிடையே எதிர்வீட்டைச் சேர்ந்த பெண்ணுக்கும் அவரது 15 வயது மகளுக்கும் பார்த்தசாரதி பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதை அடுத்து அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான பார்த்தசாரதியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications