கண்ணுல பயம் தெரியுதே.. இன்னும் 400 நாள் தான்! பிரதமர் பேச்சில் தயக்கம்.. அப்படி என்ன பேசினார்?
சென்னை : 2024 தேர்தலைப் பார்த்து பா.ஜ.க. பயப்படத் தொடங்கி இருப்பதைத் தான் பிரதமரின் உரை வெளிச்சப்படுத்துகிறது என திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி தலையங்கத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முரசொலி தலையங்கத்தில்,""Reach out to minorities. marginalised, India's best era coming" என்று பிரதமர் மோடி பேசியதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்கின்றன.
'இந்தியாவுக்கு சிறப்பான சகாப்தம் வரப்போகிறது" என்று சிறுபான்மையினரிடம் சொல்லச் சொல்லி இருக்கிறார் பிரதமர். இது பா.ஜ.க.வில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றம் ஆகும். ஏதோ ஒரு பயம் வந்திருக்கிறது. அதனால் அவரை இப்படி மாற்றிப் பேச வைத்திருக்கிறது.

பிரதமர் மோடி
இந்த ஆண்டு ஒன்பது மாநிலத் தேர்தல்கள் நடக்க இருக்கின்றன. 2024 மக்களவைத் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் டெல்லியில் பா.ஜ.க.வின் செயற்குழுக் கூட்டம் இரண்டு நாட்கள் நடந்துள்ளது. தேர்தல் வியூகத்தை வகுக்கும் கூட்டமாக இது நடந்துள்ளது. "In his address to the BJP national executive. Modi asked party workers to reach out to Pasmandas. Bohras. Muslim professionals and educated Muslims, without expecting votes in return, said a source present at the meeting. The call was mainly to build confidence among these communities." - என்று செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள்.

வாக்குகள்
மோடியின் உரை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ். "சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் நாம் உணர்வுப்பூர்வமாக அணுக வேண்டும் என்று பிரதமர் கூறியதாகச் சொல்லி இருக்கிறார்." அவ்வாறு சொல்லும்போது, வாக்குகளைப் பற்றி மட்டும் நாம் சிந்திக்கத் தேவையில்லை என்றார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்காகவும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்" என்று பிரதமர் சொன்னதாகச் சொல்லி இருக்கிறார்.

பா.ஜ.க
கடந்த ஜூலை மாதம் ஹைதராபாத்தில் பா.ஜ.க. தேசிய செயற்குழுவில் பிரதமர் ஆற்றிய உரையில், பாஸ்மாண்டா முஸ்லிம்கள் போன்ற சிறுபான்மையினரிடையே ஓரங்கட்டப் பட்டவர்களைச் சென்றடையவும், கேரளாவில் உள்ள கிறிஸ்தவ சமூகத்துடன் இணைந்து பணி யாற்றுவதற்கான வழிகளைக் கண்டறியவும் மோடி வலியுறுத்தினார். பா.ஜ.க. அரசின் திட்டங்கள், அவர்களைச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரில் உள்ள பாஸ்மாண்டா முஸ்லிம்களுக்காக பா.ஜ.க. பின்னர் ஒரு திட்டத்தைத் தொடங்கியது.

400 நாட்கள்
பாஸ்மாண்டா முஸ்லிம்களுக்கான கட்சியின் மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்துக் கேட்டதற்கு. ஃபட்னாவிஸ் இவ்வாறு கூறினார்: "ஒதுக்கப் பட்டவர்களை பிரதானப்படுத்தும்வரை எங்கள் வளர்ச்சிப் பயணம் நிறைவடையாது" என்று பிரதமர் சொன்னார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் சென்றடைவது குறித்துப் பேசிய அவர், 'தேர்தலுக்கு இன்னும் 400 நாட்கள் மட்டுமே உள்ளன. எனவே இந்த நேரத்தை நாம் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்காகப் பயன்படுத்த வேண்டும்' என்று பிரதமர் சொன்னார்" என்று பதில் அளித்துள்ளார்.

பயன் தராது
அனைத்துத் தரப்பினரையும் சென்றடைய பா.ஜ.க.வினருக்கு மோடி உத்தரவிட்டுள்ளார். ஏனென்றால், நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 400 நாட்களே இருப்பதுதான் உண்மையான காரணம் ஆகும். மதவாத அடையாள அரசியலை இனி கையில் எடுக்க முடியாது. எடுத்தால் பயன் தராது என்று பா.ஜ.க. தலைமை நினைத்திருக்கிறது. அதனால் தான் இப்படிப் பேசி இருக்கிறார் பிரதமர். போஹ்ராக்கள், பாஸ்மந்தாக்கள் மற்றும் சீக்கியர்கள் போன்ற சிறு பான்மையினர் உட்பட; சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் அணுகச் சொல்லி இருக்கிறார் பிரதமர். சூபியிசம் பற்றி அதிகம் பிரதமர் பேசிய தாகவும் செய்தி வெளியாகி உள்ளது. 'தேவாலயங்களுக்குச் சென்று மக்களைச் சந்தியுங்கள்' என்றும் சொல்லி இருக்கிறார் பிரதமர்.

எதிர்க்கட்சிகளே இல்லை
அடுத்தும் நமது ஆட்சிதான், எதிர்க்கட்சிகளே இல்லை என்று பா.ஜ.க.வினர் பேசி வருகிறார்கள் அல்லவா? அதனையும் நிராகரித்திருக்கிறார் பிரதமர். 'அதிக நம்பிக்கை உணர்வுக்கு எதிராக அவர் எச்சரித்ததாகவும்' சொல்லப்படுகிறது. "மத்தியப் பிரதேசத்தில் திக்விஜய் சிங்கின் காங்கிரசு ஆட்சிக்கு 1998 ஆம் ஆண்டு செல்வாக்கு குறைந்திருந்தது. ஆனாலும் தேர்தலில் பா.ஜ.க. தோற்றது" என்றும் பிரதமர் சொல்லி இருக்கிறார். எதிர்க்கட்சிகளைக் குறைத்து மதிப்பிடாதீர்கள் என்பதும் பிரதமரின் வேண்டுகோள்களில் முக்கியமானது. 'மோடி பிரச்சாரம் செய்தால் வென்றுவிடலாம் என்று நினைக்காதீர்கள்' என்றும் சொல்லி இருக்கிறார்.

தீபிகா படுகோன்
"திரைப்படங்கள் குறித்து பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் தேவையற்ற கருத்துகளைச் சொல்லக் கூடாது. இதனைத் தவிர்க்க வேண்டும். அரசின் நன்மைகளை இந்த சர்ச்சைகள் மறைத்துவிடுகின்றன" என்றும் பிரதமர் சொல்லி இருக்கிறார். 'பதான்' பட விவகாரம்தான் இதற்கு காரணம் ஆகும். இந்தி நடிகர் ஷாருக்கான்மீது ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றம் சாட்டி இருந்தார். தீபிகா படுகோன் அணிந்திருந்த உடை காவி நிறமாக இருந்ததை வைத்து சர்ச்சை கிளப்பப்பட்டது. இதனைத்தான் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பா.ஜ.க. பயம்
சுற்றுச்சூழல் குறித்து இந்தக் கூட்டத்தில் அவர் அதிகமாக வலியுறுத்திப் பேசி இருக்கிறார். தனது இலக்கை 2047 வரைக்கும் நீட்டித்துள்ளார் பிரதமர். 'இனி இந்தியா எங்களுக்குத்தான்' என்று சொல்லி வந்தவர்கள், இப்படி தயக்கத்துடன் பேச ஆரம்பித்துள்ள மாற்றத்துக்கு அடிப்படைக் காரணம் பயம். 2024 தேர்தலைப் பார்த்து பா.ஜ.க. பயப்படத் தொடங்கி இருப்பதைத் தான் பிரதமரின் உரை வெளிச்சப்படுத்துகிறது." என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications