தொண்டை கொஞ்சம் சரியில்லை.. மெதுவாகத்தான் பேசுவேன்.. செய்தியாளர் சந்திப்பை கலகலப்பாக்கிய இபிஎஸ்
சென்னை: சென்னையில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறினார். அப்போது அவர் பேட்டியளிக்கையில், தொண்டை கொஞ்சம் சரியில்லப்பா மெதுவாகத்தான் பேசுவேன் என்று பேசியது கலகலப்பை ஏற்படுத்தியது.
பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார்.
எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், நத்தம் விஸ்வநாதன், கேபி முனுசாமி உள்ளிட்டோரும் ஆளுநரை சந்தித்து பேசினர்.

மெதுவாகத்தான் பேச முடியும்
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அப்போது, தொண்டை கொஞ்சம் சரியில்லை.. எனவே மெதுவாகத்தான் பேச முடியும். இருக்கிறத கொஞ்சம் மேனேஜ் பண்ணிக்க வேண்டியதுதான்.. என்று சிரித்துக்கொண்டே கூறிவிட்டு தனது பேட்டியை தொடர்ந்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக ஆளுநரிடம் புகார் அளித்தேன்.

பொம்மை முதல்வராக..
தமிழகத்தில் உளவுத்துறை செயல் இழந்து உள்ளது. உளவுத்துறை முன் கூட்டியே கண்டுபிடித்து இருந்தால் கோவை சம்பவத்தை தடுத்து இருக்கலாம். பொம்மை முதல்வராக மு.க ஸ்டாலின் இருக்கிறார். அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தை திமுக அரசு பறித்துவிட்டது. நம்ம ஊரு சூப்பரு என்ற விளம்பர பேனர் வினியோகத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது. 350 செலவு ஆகும் பேனருக்கு ரூ. 7,906 விலை நிர்ணயம் செய்து கணக்கு காட்டுகிறார்கள். மதுபானக் கொள்முதலில் ஊழல் நடைபெற்றுள்ளது" என்றார்.

அனைத்துமே ஆதாரம் இல்லாதவை
எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:- " ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி அளித்த புகார்கள் அனைத்துமே ஆதாரம் இல்லாதவை. தமிழகத்தின் வளர்ச்சிக்கான ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைத்தால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் எடப்பாடி பழனிசாமி புளுகு மூட்டைகளின் பின்னால் ஒளிந்து கொண்டு இருக்கிறார்.

எல்லாம் ஒரு நாடகம்தான்
அதிமுக உள்கட்சி பூசலில் பாஜகவின் ஆதரவை பெறுவதற்காகத்தான் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. ஆளுநரை எடப்பாடி பழனிசாமி சந்தித்ததே ஒரு நாடகம்தான். தமிழகத்தில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு உள்ளது என்று பொய்யான தகவல்களை பரப்பி விடுகிறார். சட்டம் ஒழுங்கு குறித்து பேச எடப்பாடி பழனிசாமிக்கு தார்மீக உரிமை இல்லை. தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications