மியான்மரில் 2 தமிழக இளைஞர்கள் சுட்டுக் கொலை- உடலை ஒப்படைக்க கோரி சென்னையில் உறவினர்கள் போராட்டம்
சென்னை: மணிப்பூரில் இருந்து மியான்மரின் டாமு நகரம் சென்ற இரு தமிழக இளைஞர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து சென்னை அருகே பாடியநல்லூரில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Recommended Video
1960களில் முந்தைய பர்மாவான இன்றைய மியான்மரில் இருந்து தமிழ்நாட்டு தமிழர்கள் தாக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். இதனால் பர்மாவைவிட்டு அகதிகளாக தாய்நாடான இந்தியாவுக்கு பல லட்சம் தமிழர்கள் திரும்பினர்.
மோரே தமிழர்கள்
அப்படி திரும்பிய தமிழர்களில் பலர், பர்மா வாழ்க்கையை கைவிட முடியாமல் மீண்டும் அந்நாட்டுக்கே பல்வேறு துயரங்களுக்கு இடையே செல்ல முயன்றனர். இப்படி முயற்சித்த பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இந்தியாவின் கடைசி சிறுநகரமான மியான்மர் எல்லையில் உள்ள மணிப்பூரின் மோரேவில் தஞ்சமடைந்தனர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் அங்குள்ள மணிப்பூரின் பல்வேறு தேசிய இன மக்களுடன் இணைந்து வாழ்கின்றனர்.
தமிழர்கள் டாமு பயணம்
இந்தியாவின் எல்லை நகரமான மோரேவுக்கு மியான்மரின் டாமு நகரில் இருந்து அந்நாட்டு வர்த்தகர்கள் வந்து செல்ல அனுமதி உண்டு. நமது இந்தியாவின் மோரே நகருக்குள் மியான்மர் வர்த்தகர்கள் வியாபாரம் செய்துவிட்டு மாலையில் தங்களது நாடு திரும்பிவிடுவர். அதேபோல் மோரே நகரில் இருந்து இருநாடுகளிடையேயான நட்புறவுப் பாலத்தை தாண்டிய உடனே இருக்கும் டாமு நகருக்கும் இந்தியர்கள் சென்று திரும்புவதும் வழக்கம்.
மோரேவில் போராட்டம்
அப்படி டாமு நகருக்கு சென்ற தமிழகத்தைச் சேர்ந்த மோரேவில் குடியிருந்து வரும் மோகன், அய்யனார் என்ற இரு இளைஞர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மியான்மர் தீவிரவாத அமைப்பால் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் உளவாளிகள் என்ற சந்தேகத்தில் மியான்மர் ராணுவம் படுகொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. இப்படுகொலைக்கு நீதி கேட்டு மோரே நகரில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டம் வன்முறையாகவும் வெடித்தது. இதேபோல் மியான்மரில் படுகொலை செய்யப்பட்ட 2 தமிழக இளைஞர்களுக்கு நீதி கோரி சென்னை அருகே பாடியநல்லூர், செங்குன்றத்திலும் கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டது.
சென்னையில் போராட்டம்
சென்னை செங்குன்றம் பாடியநல்லூரில் உள்ள அய்யனாரின் உறவினர்கள் அவரது இல்லத்தில் இருந்து பாடியநல்லூர் சந்திப்பு வரை அமைதி ஊர்வலம் சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த செங்குன்றம் போலீசார் அனுமதி இன்றி ஊர்வலம் நடத்தியதாக அவர்களை கலைந்து போகச் செய்தனர். மேலும் இது குறித்து அவரது உறவினர்கள் தெரிவிக்கையில் இறந்தவரின் உடலை இந்தியா கொண்டுவர தமிழக முதல்வரும் மணிப்பூர் முதல்வரும் மத்திய அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.