உ.பி.யை மிஞ்சும் ஆன்மீக திராவிட மாடல் ஆட்சி- மனுநீதி அரசு... திமுக அரசு மீது சீமான் சரமாரி பாய்ச்சல்
சென்னை: தமிழகத்தில் ஆளும் திமுக ஆட்சியான உத்தரப்பிரதேசத்தை மிஞ்சுகிற ஆன்மீக திராவிட மாடல் ஆட்சி; இங்கே நடப்பது சமூக நீதி அரசு அல்ல- மனுநீதி அரசு என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திராவிட மாடல் என்றால் என்ன என்பது குறித்து விவரித்திருந்தார். அந்த பேச்சில், தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதாரத்தை மட்டும் சார்ந்தது அல்ல; சமூக நீதி, சமுத்துவம் மற்றும் பெண்கள் வளர்ச்சி இவை அனைத்தும் சேர்ந்தது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி என குறிப்பிட்டிருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

திராவிட மாடல்
பிரதமர் மோடிக்கு திராவிட மாடல் குறித்து முதல்வர் ஸ்டாலின் வகுப்பு எடுத்தார் என அவரது ஆதரவாளர்கள் பாராட்டி இருந்தனர். ஆனால் திராவிட மாடல் குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனங்களையும் முன்வைத்தன. தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றில் திராவிட மாடல் அரசு குறித்து விமர்சித்துள்ளார். இது தொடர்பான சீமான் அறிக்கை:

ஆன்மீக திராவிட மாடல்
சென்னையின் பூர்வீகக்குடிகளின் வாழ்விடங்களை இடித்துத்தகர்த்து மண்ணின் மக்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு, 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆவடியில் பசு மடம் கட்டுகிறது திராவிட மாடல் அரசு; இல்லை! இல்லை! ஆன்மீக திராவிட மாடல் அரசு!

மனுநீதி அரசு
சிதம்பரம் நடராசர் கோயிலில் தமிழர் மூதாதை நந்தன் உள்நுழைந்த தெற்கு நுழைவாயில் அடைக்கப்பட்டு, இன்றும் தீண்டாமைச்சுவர் இருக்கிறதெனக் கூறி, அதனைத் தகர்த்துவிட்டு, நந்தன் பெயரில் மணிமண்டபம் கட்டக்கோருகிறோம். இறந்துபோன கோயில் யானைகளுக்குக் கோயில்களில் நினைவு மண்டபங்கள் கட்டுகிறது சமூக நீதி அரசு! இல்லை! இல்லை! மனுநீதி அரசு!

யானைகள் நினைவு மண்டபமா?
கோவையில் கடந்த ஐந்தாண்டு காலத்தில் மட்டும் 79 யானைகள் இறந்துள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றன. காடுகளிலுள்ள யானைகளின் இருப்புக்கோ, அவை செல்வதற்கான வழித்தடத்துக்கோ வழிவகை செய்யாத திமுக அரசு, கோயில் யானைகளுக்கு நினைவு மண்டபம் கட்டத் துடிப்பது வெட்கக்கேடானது.

உ.பி.யை மிஞ்சிடும்
அரசின் பெயரில் கடன் வாங்கும் 90,000 கோடி ரூபாயில்தானே, பசுக்களுக்கு மடமும், யானைகளுக்கு நினைவு மண்டபமும் கட்டுகிறீர்கள்? சிறப்பு! சிறப்போ சிறப்பு! உத்திரப்பிரதேச மாடலையும் மிஞ்சிவிடும் உங்களது ஆன்மீக திராவிட மாடல் ஆட்சி! இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications