காவிரி நதிநீர் உரிமையை மீட்க செப்.30-ல் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நாம் தமிழர் கட்சி போராட்டம்!
சென்னை: காவிரி நதிநீர் உரிமையை மீட்க செப்டம்பர் 30-ந் தேதி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 5,000 கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என முதலில் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதனை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. இதற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தற்போது வினாடிக்கு 3,000 கன அடி நீரை திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது.

கர்நாடகாவில் கன்னட விவசாய அமைப்புகள், கன்னடர் அமைப்புகள் தமிழ்நாட்டுக்கு சொட்டு நீரை திறந்துவிடக் கூடாது என போராட்டம் நடத்தின. பின்னர் மண்டியா பந்த், பெங்களூர் பந்த் போராட்டங்கள் நடத்தப்பட்டன. செப்டம்பர் 29-ந் தேதி கர்நாடகா தழுவிய பந்த் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
பெங்களூரில் நேற்று நடைபெற்ற பந்த் போராட்டத்தின் போது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தை வைத்து இழிவான செயல்களை கன்னடர் அமைப்புகள் செய்தன. இதற்கு தமிழ்நாட்டின் பெரும்பாலான கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.
செப்.30 ஆளுநர் மாளிகை முற்றுகை: தற்போது தமிழ்நாட்டிலும் காவிரி நதிநீர் பிரச்சனைக்கான போராட்டங்கள் தொடங்கிவிட்டன. காவிரி டெல்டா விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனர். செப்டம்பர் 30-ந் தேதி சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அறிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி போராட்டம்: இந்நிலையில் செப்டம்பர் 30-ந் தேதி நாம் தமிழர் கட்சியினரும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்திற்கான நீரைத் திறந்துவிட மறுக்கும் கர்நாடகா மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசைக் கண்டித்தும் தமிழகத்துக்கான உரிமைகளைப் பெற்றுத் தராமல் காலம் தாழ்த்தி வரும் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் தமிழர் விரோதப் போக்கைக் கண்டித்தும் தமிழ்நாட்டின் காவிரி நதிநீர் உரிமையை நிலைநாட்ட திறனற்ற தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசைக் கண்டித்தும் வருகிற 30-ந் தேதி காலை 10 மணியளவில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்குமாறு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேரறிவிப்பு செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications