அதென்ன பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு.. காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு சீமான் கடும் எதிர்ப்பு
சென்னை: பொருளாதார அடிப்படையில் பின் தங்கிய அனைத்து ஜாதியினருக்கும் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இத்தேர்தல் அறிக்கையில், அனைத்து ஜாதியிலும் பொருளாதார அடிப்படையில் பின் தங்கிய ஏழைகள் அனைவருக்கும் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. ஜாதிய அடிப்படையில்தான் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் நிலையில் காங்கிரஸின் இந்த தேர்தல் அறிக்கை விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

நீட் தேர்வு: இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது: நீட் என்ற தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ்தான். நீட் தேர்வு எழுதியவர்களுக்கு வாழ்த்துகள் கூறியவரும் ராகுல் காந்திதான். இப்போது நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு உள்ளது. நாம் நீட் தேர்வு வேண்டாம் என்கிறோம். இதனால் நீட் தேர்வை மாநிலங்கள் விரும்பினால் செயல்படுத்தலாம் என வாக்குறுதி தருகிறது காங்கிரஸ்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு: இந்த நாட்டை அரை நூற்றாண்டுகளாக - 50 ஆண்டுக்கும் மேலாக ஆண்டதும் காங்கிரஸ்தான். அப்போது எல்லாம் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் என்ன செய்து கொண்டிருந்தது காங்கிரஸ்? தமிழ்நாட்டில் ஆனைத்து தரப்பினரும் இதனை பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் காங்கிரஸ் கேட்கவில்லையே.
திரவுபதி முர்முவுக்கு ஏற்பட்ட நிலைமை: அதேபோல ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு குறித்து நேருவுக்கும் அம்பேத்கருக்கும் இடையே நீண்ட விவாதம் நடைபெற்று அம்பேத்கர்தான் வென்றார். ஆனால் திடீரென மீண்டும் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு என காங்கிரஸ் பேசுகிறதே. நான் ஒரு பறையன். அதானியாகிவிட்டேன் என்றால் என்னுடைய பொருளாதார அளவுகோல் என்பது மாறும். ஆனால் என் மீது சுமத்தப்பட்டுள்ள இழிவும் தீண்டாமையும் மாறுமா? நாடாளுமன்ற புதிய கட்டிடத் திறப்பு விழாவுக்கு திரவுபதி முர்முவை ஏன் அழைக்கவில்லை? அத்வானியும் மோடியும் உட்கார்ந்திருக்கும் போது நாட்டின் முதல் குடிமகள், திரவுபதி முர்மு நின்று கொண்டிருந்தாரா இல்லையா? இதுதான் நீ கொடுத்த பெண்ணிய உரிமையா? இதுதான் உங்களது பாரத் மாதாக்கி ஜேவா? தாழ்த்தப்பட்ட ,ஒதுக்கப்பட்ட, பழங்குடி மகள் என்பதற்காகவே இப்படி செய்தீர்கள்தானே?
ராம்நாத் கோவிந்த்: நாட்டின் முதல் குடிமகன், ராம்நாத் கோவிந்தை கோவிலுக்குள் அனுமதிக்காமல் மரத்தின் நிழலில் யாகம் வளர்த்து சாமி கும்பிட்டுவிட்டுப் போனதை பார்த்தீர்களா? இல்லையா? நாட்டின் முதல் குடிமகனுக்கே இந்த நிலைமை எனில்.. இங்கே எதுக்கு பொருளாதார் அளவு கோல். பொருளாதார அளவு கோல் என்பது மாறக் கூடியதுதான். ஆனால் சாதிய இழிவுத் தீண்டாமை ஒழியலைதானே.. அது முதல் குடிமகனாக இருந்தாலும்.
இளையராஜா: ஈடு இணையற்ற இசைமேதை இளையராஜா. அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி கொடுக்கும் போது ஒரு தலித்துக்கு கொடுத்தோம் என்றுதானே சொன்னீர்கள்? சாதனைக்காக கொடுக்காமல் ஜாதிக்காக இளையராஜாவுக்கு எம்பி பதவி கொடுத்தவங்கதானே நீங்க?
முன்னேறிய வகுப்பு: முன்னேறிய வகுப்பு என்று சொல்லிவிட்ட பிறகு இடஒதுக்கீடு எதுக்கு? முன்னேறிய வகுப்பில் பின் தங்கி இருப்பாய் எனில் நீ பிசி, எஸ்சி, எஸ்டிக்கு வா.. இந்த இடஒதுக்கீட்டைப் பெறு. உச்சாணிக் கொம்பிலேயே இருப்பேன் என்பது எப்படி சரியாகும்? இது திமிரா இல்லையா? இப்படி இருந்தால் எப்படி ஜாதிய இழிவு துடைக்கப்படும்? ஆகையால் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு ஏற்புடையது அல்ல. இவ்வாறு சீமான் கூறினார்.












Click it and Unblock the Notifications