நடிகர் சூர்யாவை உதைக்க வேண்டும் என சொன்னவரை அடிங்க காசு தருகிறேன்-வன்னியர் வலியும் நியாயமானது:சீமான்
சென்னை: ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யாவை உதைக்க வேண்டும் என சொன்ன பாமக பிரமுகரை வேண்டுமானால் அடிங்க..நான் காசு தருகிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வ.உ.சிதம்பரனார் 85ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:
நான் அந்த படத்தை பார்க்கும் போது வன்னியர் சார்ந்த குறியீடுகளை உன்னிப்பாக கவனிக்கவில்லை. ஜெய்பீம் படம் தொடர்பாக கவிஞர் ஜெயபாஸ்கரன்தான் முதலில் கேள்விகளை எழுப்பினார். உண்மை சம்பவத்தில் தொடர்புடைய அந்தோணிசாமி என்கிற பெயரை ஏன் மாற்ற வேண்டும்? அதேபோல வன்னியர் சங்கத்தின் அடையாளமாக இருக்கும் அந்த குறியீட்டை ஏன் காலண்டரில் பயன்படுத்த வேண்டும்?
நேரலை: 18-11-2021 செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழர், நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் 85ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு - செய்தியாளர் சந்திப்பு | தலைமையகம் - சென்னை https://t.co/MtcmffAUn9
— சீமான் (@SeemanOfficial) November 18, 2021
சூர்யாவுக்கு தெரிந்திருக்காது
பொதுவாக நடிகர் சூர்யா கதையைத்தான் கேட்டிருப்பார். இதுபோன்ற குறியீடுகள் எல்லாம் துணை இயக்குநர், ஆர்ட் டைரக்டர், இயக்குநர்தான் முடிவு செய்வார்கள். ஒருவேளை நான் படம் பார்க்கும்போது கண்ணில் பட்டிருந்தால் தம்பி சூர்யாவை தொடர்பு கொண்டு அதை தூக்கிவிடு என சொல்லி இருப்பேன். அவரும் செய்திருப்பார்.
காலண்டர் மாற்றத்துடன் பிரச்சனை முடிந்தது
எனக்கு அண்ணன் சிவகுமார் குடும்பத்தை நன்கு தெரியும். அவர்களைப் பொறுத்தவரை எந்த பிரச்சனையும் வேண்டாம்; தாங்கள் உண்டு; தங்கள் வேலை உண்டு என இருப்பவர்கள். இப்போது சுட்டிக்காட்டியவுடன் அந்த காலண்டரில் படத்தை மாற்றி இருக்கிறார்கள். அத்துடன் பிரச்சனை முடிந்துவிட்டதாக போக வேண்டும்.
ஜெய்பீம் குறித்த சீமானின் கேள்விகள்
குறவர், இருளர் மக்களுக்கு பாதுகாப்பாக இருந்ததே வன்னியர்கள்தான். அவர்களை ஏன் ஜெய்பீம் படத்தில் தவறாக காட்ட வேண்டும்? நீங்கள் ஒரு சமூகத்தின் வலியை காட்டப் படம் எடுக்கும் போது இன்னொரு சமூகத்துக்கு ஏன் வலியை தர வேண்டும்? அங்கே போராடிய கோவிந்தன் என்பவரை ஏன் படத்தில் இடம்பெறச் செய்யவில்லை?
அடிங்க.. நான் காசு தருகிறேன்
எங்களைப் பொறுத்தவரை ஜெய்பீம் திரைப்படம் சிறந்த படம்; வெற்றிகரமாக ஓடிவிட்டது. அதேபோல் ஒரு சமூகத்தின் வலியை அன்புமணி வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது வலியும் நியாயமானது. தம்பி சூர்யாவை உதைக்க வேண்டும் என்றெல்லாம் பேசுவது பதிவிடுவது தேவை இல்லை. அதை எல்லாம் செய்யக் கூடாது. வேண்டுமானால் சூர்யாவை உதைக்க வேண்டும் என சொன்னவரை நீங்க அடிங்க.. நான் காசு தருகிறேன். பாஜக, ஆர்.எஸ்.எஸ். அஜெண்டாவை செயல்படுத்தும் வகையில் பாமக செயல்படுத்துகிறது என கருத தேவை இல்லை. நான் அப்படி நினைக்கவும் இல்லை. அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து டாக்டர் ராமதாஸ் விலகுவதாக அறிவித்த பின்னர் ஏன் அப்படி யோசிக்க வேண்டும்? இவ்வாறு சீமான் கூறினார்.