தேசிய கொடியை அவமதித்து பேசி வருத்தம் தெரிவித்த எஸ்வி சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்
தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேசியதற்கும், முதல்வர் குறித்து பேசியதற்கும் எஸ்.வி சேகர் வருத்தம் தெரிவித்த நிலையில் அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: தேசியக்கொடி அவமதிப்பு வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது. காவல்துறை விசாரணைக்கு தேவைப்படும் போது ஆஜராக வேண்டும் என்று எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி போர்வை போர்த்தியது, பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தலைவர்களின் சிலைகளை இவ்வாறு களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்திருந்தார்.
அதற்கு பதிலளித்து வீடியோ வெளியிட்ட எஸ்.வி.சேகர், காவியை களங்கம் என குறிப்பிடும் தமிழக முதல்வர், களங்கமான தேசியக் கொடியைத் தான் ஆகஸ்டு 15 ம் தேதி ஏற்றப்போகிறாரா எனவும், தேசியக் கொடியில் உள்ள காவியை வெட்டி விட்டு வெள்ளை மற்றும் பச்சை நிறம் கொண்ட கொடியை ஏற்கிறாரா என்கிற வகையில் வீடியோ வெளியிட்டார்.
கொரோனா சிகிச்சை அளிப்பதிலிருந்து மருத்துவர் வீரபாபு திடீர் விலகல்.. சித்த மையம் என்னவாகும்?
எஸ்.வி சேகர் மீது புகார்
தேசியக் கொடியை அவமதித்தும், தமிழக முதல்வரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட பா.ஜ.க நிர்வாகி எஸ்.வி சேகருக்கு எதிராக, சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன்
இந்த புகாரின் அடிப்படையில், எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், வழக்கில் காவல் துறையினர் தன்னை கைது செய்யக் கூடும் எனக் கூறி, எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். எஸ்.வி சேகர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
எஸ்.வி சேகர் வருத்தம்
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, எஸ்.வி சேகர் சார்பில் வருத்தம் தெரிவித்து உத்தரவாத மனு தாக்கல் செய்யப்பட்டது, அந்த மனுவில்,தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேசியதற்கும், தமிழக முதல்வர் குறித்து பேசியதற்கும் வருத்தம் தெரிவித்திருந்த எஸ்.வி சேகர், தான் வாழ்நாள் முழுதும் இனி ஒருபோதும் தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
போலீஸ் ஏற்பு
காவல்துறை சார்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ. நடராஜன், தேசியக்கொடியை அவமதித்தது மற்றும் முதல்வர் பேச்சுக்கு களங்கம் கற்பித்தது ஆகியவற்றுக்காக வருத்தம் தெரிவித்து எஸ்.வி சேகர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த உத்தரவாத மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவித்திருந்தார். அதே நேரத்தில் வழக்கு கைவிடப்படாது என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
நிபந்தனை முன் ஜாமீன்
இதனையடுத்து எஸ்.வி சேகரை கைது செய்ய செப்டம்பர் 16ஆம் தேதி வரை தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார். முன்ஜாமீன் கோரிய வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, தேவைப்படும் போது காவல்துறையின் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் எஸ்.வி சேகருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.