எஸ் வி சேகர் வருத்தத்தை ஏற்கிறோம்.. வழக்கை தள்ளுபடி செய்ய முடியாது: போலீஸ்.. கைதுக்கு தடை நீடிப்பு
தேசியக் கொடியை அவமதித்து பேசியதற்கு எஸ்.வி சேகர் உயர்நீதிமன்றத்தில் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்து பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.
சென்னை: தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேசியதற்கும், தமிழக முதல்வர் குறித்து பேசியதற்கும் நடிகரும் பாஜக நிர்வாகியுமான எஸ்.வி சேகர் தெரிவித்த வருத்தத்தை ஏற்றுக்கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூறியுள்ளனர். அதே நேரத்தில் அவர் மீதான வழக்கை ரத்து செய்யப்போவதில்லை என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து எஸ்.வி சேகரை வரும் 14ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய அரசு அறிவித்த மும்மொழி கொள்கைக்கு முதல்வர் பழனிசாமி உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக வீடியோ வெளியிட்ட பாஜகவின் எஸ்வி சேகர், தேசிய கோடியை அவமதிக்கும் விதமாகவும் முதல்வர் பழனிசாமியை கடுமையாக விமர்சித்தும் பேசியிருந்தார்.

எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி போர்வை போர்த்தியது, பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தலைவர்களின் சிலைகளை இவ்வாறு களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்திருந்தார்.
இதற்கு எஸ்.வி.சேகர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவமாரியதை செய்யும் விதமாக பேசி வீடியோ வெளியிட்டார். காவியை களங்கம் என குறிப்பிடும் தமிழக முதல்வர், களங்கமான தேசியக் கொடியைத்தான் ஆகஸ்ட் 15ஆம் தேதி ஏற்றப்போகிறாரா எனவும், தேசியக் கொடியில் உள்ள காவியை வெட்டி விட்டு வெள்ளை மற்றும் பச்சை நிறம் கொண்ட கொடியை ஏற்றுவாரா என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்.
இதனையடுத்து எஸ்.வி சேகருக்கு எதிராக, சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், எஸ்.வி சேகர் மீது மத்திய குற்ற பிரிவினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் காவல் துறையினர் தன்னை கைது செய்யக் கூடும் என பயந்து முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது,மத்திய குற்றப்பிரிவு போலீசார் சார்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ. நடராஜன், அரசியலமைப்பு சட்டப்படி தேசிய கொடியின் மூன்று நிறங்களுக்கு உரிய விளக்கம் கொடுக்கப்பட்டுள்ள போது எஸ்.வி சேகர் மதரீதியான கலவரத்தை உண்டாக்கும் நோக்கில் கருத்து தெரிவித்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் இனி பேசமாட்டேன், இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது என எஸ்.வி சேகர் உத்தரவாதம் அளிப்பதோடு, நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவித்து நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கலாம் எனவும், அதே நேரத்தில் வழக்கை ரத்து செய்ய முடியாது எனவும் தெரிவித்தார்.
இதனையடுத்து எஸ்.வி. சேகர் கடந்த 2ஆம் தேதியன்று பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தார். அதில், தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேசியதற்கும், தமிழக முதல்வர் குறித்து பேசியதற்கும் வருத்தம் தெரிவித்துள்ள எஸ்.வி சேகர், தான் இனி வாழ்நாள் முழுவதும் ஒருபோதும் தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து எஸ்.வி சேகரை கைது செய்ய ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடையை 8ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார் நீதிபதி.
இந்த நிலையில் எஸ்.வி சேகர் முன்ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. எஸ்.வி சேகரின் வருத்தத்தை ஏற்றுக்கொள்வதாக கூறிய மத்திய குற்றப்பிரிவு போலீசார், வழக்கை ரத்து செய்ய மாட்டோம் என்று தெரிவித்தனர். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வரும் 14ஆம் தேதிவரை எஸ்.வி சேகரை காவல்துறையினர் கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்டதோடு ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications