அதிமுகவுடன் டச்சில் 10 திமுக எம்எல்ஏக்கள்.. எடப்பாடி சொன்னதை நம்பி பரபரப்பு கிளப்பிய தேசிய ஊடகங்கள்!
சென்னை: அதிமுகவுடன் 10 திமுக எம்.எல்.ஏக்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக போகிற போக்கில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக அக்கட்சியின் ஒரு பிரிவினரால் நியமிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்து தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற போது அந்த ஆட்சி 3 மாதம் மட்டும் நீடிக்கும்; 6 மாதம்தான் காலம் தள்ளும் என திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் ஆரூடம் கூறின. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, அதிமுக எம்.எல்.ஏக்களை தம் வசம் தக்க வைக்க அத்தனை வழிமுறைகளையும் கையில் எடுத்தார். இதன் விளைவாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தம்மை ஆதரிக்கும் எம்.எல்.ஏக்கள் பலருக்கும் பங்களா கட்ட நில ஒதுக்கீடு செய்து ஒரு அதிமுக எம்.எல்.ஏ. காலனியையே உருவாக்கியதாகவும் பரபரப்பு எழுந்தது. இத்தகைய எடப்பாடி பழனிசாமியின் முயற்சிகள் எதுவும் வீண்போகவும் இல்லை. அதனால்தான் என்னவோ ஆட்சிக் காலம் முழுவதையும் எடப்பாடி பழனிசாமி தரப்பு சிக்கல் இல்லாமல் கடத்தியது.
72 நாள் ஏக்கம்! சென்னையில் களமிறக்கப்பட்ட மா.செக்கள்! இன்றே அதிமுக அலுவலகம் போகும் எடப்பாடி! சரவெடி
ஆரூடங்கள் பொய்யாகின
அதேநேரத்தில் அதிமுக எம்.எல்.ஏக்களை திமுக வளைத்து ஆட்சியை கவிழ்க்கும் எனவும் ஆரூடங்கள் சொல்லப்பட்டன. ஆனால் அதிமுக எம்.எல்.ஏக்களை பேரம் பேச மாட்டோம்; கொல்லைப்புறமாக ஆட்சியைப் பிடிக்கமாட்டோம் என திமுக திட்டவட்டமாக கூறியது. அதிமுக ஆட்சி முடிந்து தேர்தலில் திமுக வென்று அரியாசனம் ஏறியது. திமுக ஆட்சியில் அமைந்த நாள் முதலே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கொத்து கொத்தாக கட்சி தாவக் கூடும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அப்படி எல்லாம் இல்லாமல் நடக்கவும் இல்லை.
உட்கட்சி பூசலில் அதிமுக
இன்னொரு பக்கம், அதிமுகவில் உட்கட்சி மோதல் வெடித்து அக்கட்சியே இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது. அதிமுகவின் ஓபிஎஸ் பக்கம் சில எம்.எல்.ஏக்கள் மட்டுமே நிற்க, எடப்பாடி பழனிசாமி பக்கம் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் ஆதரவாக இருக்கின்றனர். இதனால் எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை நோக்கி எளிதாக நகர முடிந்தது. இப்போதும் உக்கிரமாக இருக்கிறது அதிமுகவின் உட்கட்சி பூசல்.
பற்றவைத்த எடப்பாடி பழனிசாமி
இந்நிலையில்தான் அதிமுக எம்.எல்.ஏக்கள் திமுகவுக்கு தாவப் போவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்து கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக திருவள்ளூரில் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு மிக யதார்த்தமாக, திமுகவின் 10 எம்.எல்.ஏக்கள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர் என ஒரு பிட்டைத்தான் போட்டார் எடப்பாடி பழனிசாமி. அதாவது ஏட்டிக்குப் போட்டியான ஒருபதில்தான் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து வந்தது.
பரபரத்த தேசிய அரசியல்
தமிழகத்தில் ஆளும் திமுகவின் 10 எம்.எல்.ஏக்கள், உட்கட்சி மோதலில் பிளவுபட்டு இரண்டாக உடைந்துவிட்ட அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் என்பது வேடிக்கையானதுதான்.. ஆனாலும் இந்த வேடிக்கையான ஒரு பதிலும் சீரியசாக எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டது. அவ்வளவுதான் தமிழகம் தொடங்கி ஒட்டுமொத்த தேசிய அரசியலும் பரபரத்துவிட்டது. தேசிய ஊடகங்கள் தலைப்புச் செய்திகளாக இதனை பறக்கவிட்டன. Trouble in TN politics? என்ற தலைப்பில் அதாவது தமிழக அரசியலில் நெருக்கடி என்ற ரேஞ்சுக்கு செய்திகளை வெளியிட்டன. இதனால் தேசிய கட்சிகளும் பிற மாநில அரசியல் கட்சிகளும் கூட ஒரு கணம் அதிர்ந்தே போய்விட்டன. இது திமுகவுக்கு பல வகைகளில் நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது.
எடுபடாத திமுகவின் பதிலடி
இதனால் வேறுவழியே இல்லாமல் திமுக தரப்பு செய்தியாளர்களிடம் விளக்கம் தர வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டது. சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த, அதிமுகவின் 50 எம்.எல்.ஏக்கள், 2 எம்.பிக்கள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்றார். மேம்போக்காக பார்த்தால் எடப்பாடி பழனிசாமிக்கு திமுகவின் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்ததாக தோன்றும். இருந்தபோதும் தேசிய ஊடகங்கள் எட்பபாடி போட்ட பிட்டைத்தான் பெரிதாக்கி பேசுபொருளாக்கி வைத்திருக்கின்றன என்பதுதான் யதார்த்தம்.