நீட் தேர்வு விலக்கு.. அரசின் மசோதா பரிசீலனையில் உள்ளது.. ஆர்டிஐ கேள்விக்கு தமிழக ஆளுநர் மாளிகை பதில்
சென்னை: நீட் விலக்கு தொடர்பான அரசின் மசோதா பரிசீலனையில் உள்ளது என்று தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக குரல்கள் மீண்டும் கடுமையாக வைக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வுக்கு எதிராக மாநில அரசு சட்டம் இயற்றி உள்ளது. கடந்த சட்டசபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அவையில் இது தொடர்பான சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.
கடந்த செப்டம்பரில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
4 ரூபாய் போதாது என்றேன்.. கருணாநிதி 10 ரூபாய் கொடுத்தார்.. நன்றியுடன் நினைவுக்கூறும் குமரி அனந்தன்!
பன்வாரிலால் புரோஹித்
அப்போது தமிழ்நாடு ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் இருந்தார். ஆனால் அவர் தமிழ்நாட்டில் நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இதையடுத்து தமிழ்நாட்டின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாற்றப்பட்டார்.
ஆளுநர் ரவி
இதையடுத்து தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர். என் ரவி பொறுப்பேற்றார். ஆனால் அவர் ஆளுநராக பொறுப்பேற்ற பின்பும் கூட ஆர். என் ரவி இந்த மசோதா மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மசோதா இன்னும் கிடப்பிலேயே இருக்கிறது.
நீட் மசோதா
இந்த நிலையில் தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக மாநில அரசு இயற்றிய சட்ட மசோதாவின் நிலை என்ன என்று அரசுக்கும், ஆளுநர் தரப்பிற்கும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். இந்த தகவல் அறியும் உரிமை கேள்விக்கு ஆளுநர் தரப்பில் இருந்து பிரின்ஸ் கஜேந்திர பாபுவிற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
நீட் விலக்கு
நீட் விலக்கு தொடர்பான அரசின் மசோதா பரிசீலனையில் உள்ளது என்று ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா எங்களுக்கு கிடைத்துள்ளது. இதை பரிசீலனை செய்து வருகிறோம் என்று கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கேள்விக்கு ஆளுநர் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு தரப்பில் இருந்து இன்னும் மசோதாவிற்கு பதில் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.