நீட் விலக்கு.. மத்திய அரசின் 16 கேள்விகளுக்கு தமிழக அரசு பதில்..முன்னேற்றம் வரும் - மா.சுப்ரமணியன்
சென்னை: நீட் விலக்கு மசோதா தொடர்பாக மத்திய அரசு கேட்ட 16 கேள்விகளுக்கு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து பதில் அனுப்பி உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். நீட் விவகாரத்தில் முன்னேற்றம் வரும் என்று எதிர்பார்ப்போம் எனவும் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 2ஆம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நகர்ப்புற வாழ்விட குடியிருப்பு பகுதியில் பயனாளிகளுக்கு மருத்துவ பெட்டகத்தை அமைச்சர் மா.சுப்ரமணியன் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "மக்களைத் தேடி மருத்துவம் கடந்த ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்வர் துவங்கி வைத்தார். அரசு மருத்துவம் அனைவருக்கும் போய் சேர வேண்டும் என்ற நோக்கில் துவங்கியது. அந்தத் திட்டம் 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இந்தத் திட்டத்தை பொறுத்தவரை கடந்த ஓர் ஆண்டில் தமிழகத்தில், 74.92% பேருக்கு பரிசோதனையும், 83,23,723 பேருக்கு மருந்து பெட்டகமும் வழங்கப்பட்டு உள்ளது. 1,56,57,595 மருந்து பெட்டிகள் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 83,73,724 மருந்துகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி மருந்து காலியாகி விட்ட நபருக்கு ரிபீட்டட் சேவை முறையில் வழக்கப்பட்டு உள்ளது.
நோயாளிகளின் உடம்பில் உள்ள குறைபாடுகள் பற்றி அறிந்துகொள்ள சுகாதார குடும்ப புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது தமிழகம் முழுவதும் மருத்துவ குடும்ப அட்டை வழங்க இருக்கிறோம். இந்தத் திட்டத்தை பொறுத்தவரை சென்னையில் கால தாமதாம் ஆகினாலும் 15,75,400 பேர் பரிசோதனையில் உட்படுத்த உள்ளனர்.
இந்தத் திட்டத்தின் பயன் முக்கியமாக மலைவாழ் மக்களுக்கு முதலில் கொண்டு செல்லும் நோக்கில் இந்தத் திட்டம் சென்னையில் தாமதமாக ஆகியுள்ளது. கிராமப்புற மக்களின் மருத்துவம் பார்க்க இந்தத் திட்டம் மூலம் 10 ஆயிரம் செவிலியர்கள் மேல் உள்ளனர். 19,535 பேர் இந்தத் திட்டத்திற்கு முழுவதுமாக செயல்பட்டு வருகிறோம். இன்னும் 2 ஆயிரம் பேரை இந்தத் திட்டதிற்கக்காக தேசிய சுகாதார திட்டம் நியமிக்க உள்ளது.
நீட் விலக்கில் தமிழகம் தான் தீவிரமான நடவடிக்கை எடுத்து வருகிறது. நீட் விலக்கில் மத்திய அரசு கேட்ட 16 கேள்விகளுக்கு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து பதில் அனுப்பி உள்ளோம். நீட் விலக்கில் முன்னேற்றம் வரும் என்று எதிர்பார்ப்போம் என்று கூறினார்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கேட்டு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு மத்தியஅரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த மத்திய உள்துறை அமைச்சர், நீட் விலக்கு மசோதா பரிசீலனையில் உள்ளதாக தெரிவித்ததுடன், இதுதொடர்பாக விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஏற்கனவே செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் தேர்வு தகுதியின் அடிப்படையிலான தேர்வு என்று கூறியிருப்பதுடன், இது தேசியக் கல்விக் கொள்கைக்கு முரணாக உள்ளதா என கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. நீட் விலக்கு மசோதா மத்திய அரசின் வரம்பிற்குள் வந்துள்ளதா அல்லது மாநிலஅரசின் வரம்பிற்குள் வந்துள்ளதா என்பது உள்ளிட்ட விவரங்களை மத்தியஅரசின் சுகாதார அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் ஆகிய 2 துறைகள் கேள்வி எழுப்பி உள்ளது அதற்கு பதில் அளிக்க உள்ளதாகவும், நீட் விலக்கு பெறுவதற்கு, மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்பதை சுட்டிக்காட்டி முதல்வர் ஒப்புதலுக்கு பிறகு மத்திய அரசுக்கு விரைவில் தமிழக அரசின் பதில் கடிதம் அனுப்பப்படும் என கூறினார்.
இந்த நிலையில், நீட் விலக்கில் மத்திய அரசு கேட்ட 16 கேள்விகளுக்கு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து பதில் அனுப்பி உள்ளோம் என்றும், நீட் விவகாரத்தில் முன்னேற்றம் வரும் என்று எதிர்பார்ப்போம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications