சமபந்தி விருந்தில் ஒதுக்கிறார்கள்.. கண்ணீர்விட்ட நரிக்குறவ பெண்...தன்னுடன் அமர வைத்து உணவுண்ட அமைச்சர்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் பிரசித்தி பெற்ற இந்து கோவில்களில் தமிழக அரசு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க தலசயனப் பெருமாள் கோயிலில் மதிய அன்னதானம் அரசால் வழங்கப்படுகிறது,
சமீபத்தில் இதில் கலந்துகொள்ள சென்ற நரிக்குறவ பெண்ணான அஸ்வினி என்பவரை கோயில் ஊழியர்கள் தரக்குறைவாக பேசி சாப்பிட விடாமல் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.

நரிக்குறவ பெண்ணுக்கு அவமதிப்பு
அந்தப் பெண் தனக்கு நேர்ந்த அவமானத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். தமிழக அரசு சமத்துவம் மிக்க திட்டங்களை கொண்டு வருவதாகவும், ஆனால் அதிகாரிகள் இதனை அவமதிக்கும் வகையில் செயல்படுவதாகவும் அவர் பரபரப்பு குற்றம்சாட்டி இருந்தார். இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் தெரிவித்தனர்.

அமைச்சர் சேகர்பாபு செய்த செயல்
இந்த நிலையில் இன்று தலசயனப் பெருமாள் கோயிலில் அனைவருக்கும் சமபந்தி விருந்து அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொண்ட இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, நரிக்குறவர்களுடன் அமர்ந்து சமபந்தி விருந்தில் கலந்து கொண்டார். அப்போது கோவில் ஊழியர்கள் தரக்குறைவாக பேசி அவமதிப்புக்கு உள்ளான நரிக்குறவ பெண்ணான அஸ்வினியை அழைத்த அமைச்சர் சேகர்பாபு தனது அருகில் அழைத்தார்.

அதிகாரிகளுடன் ஆலோசனை
''அன்னதானம் என்பது அனைவருக்கும் சமமானது. வாருங்கள் என் அருகில் அமர்ந்து சாப்பிடுங்கள்'' என்று அமைச்சர் சேகர்பாபு அந்த பெண்ணிடம் கூறினார். தொடர்ந்து அந்த பெண்ணுடன் அமர்ந்து அவர் உணவு சாப்பிட்டார். இதனை தொடர்ந்து இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு அனைவருக்கும் இலவச வேட்டி சேலைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான நரிக்குறவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அமைச்சர் சேகர்பாபு ஆலயத்தை ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்
நரிக்குறவர் பெண்ணை தனது அருகில் அமர வைத்து சாப்பிட்ட அமைச்சர் சேகர்பாபுக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்தனர். சமூக நீதியை வெறும் பேச்சோடு மட்டும் நிறுத்தி விடாமல் அதனை தி.மு.க அரசு ரியலாகவும் செய்து வருகிறது என்று அவர்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர். நரிக்குறவர்களுடன் அமர்ந்து அமைச்சர் சேகர் பாபு உணவு உண்ணும் காட்சி சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications