தமிழக மக்களே உஷார்.. புதுசு புதுசா யோசித்து ஆட்டையை போடுகிறாங்க.. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை
சென்னை: சமீப காலமாக ஆன்லைன் மூலமாகவும் தொலைபேசி மூலமாக புதுபுது வழிகளில் நூதன முறையில் மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இது தொடர்பாக நூதன மோசடி ஒன்று தற்போது அதிகரித்து வருவதாகவும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் வலியுறுத்தி தமிழக டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தனது சமூக வலைத்தள பக்கத்தில் சமூக விழிப்புணர்வு மற்றும் சைபர் கிரைம் குற்ற செயல்கள் தொடர்பாக அடிக்கடி பதிவிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
அந்த வகையில், தற்போது அரங்கேறி வரும் நூதன முறைகேடு குறித்தும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி டிஜிபி சைலேந்திரபாபு தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் சைலேந்திர பாபு கூறியிருப்பதாவது:-

போதைப்பொருள் உள்ளது
உங்களுக்கு ரெக்காடர்டு மெசேஜ் வரும். அதில் உங்களுக்கு அனுப்பப்பட்ட பார்சல் ஒன்று திரும்பி வந்துள்ளது. அதைப்பற்றி தெரிய வேண்டும் என்றால் 1 ஐ அழுத்துங்கள் என்று சொல்லும். 1 ஐ அழுத்தினால் உங்களுக்கு அனுப்பப்பட்ட பார்சல் ஒன்று திரும்பி வந்துள்ளது. திரும்பி வந்தந்து மட்டும் இல்லை. இதில் போதைப்பொருள் எல்லாம் உள்ளது. பாஸ்போர்ட் எல்லாம் சட்ட விரோத பாஸ்போர்ட் உள்ளது. எனவே இது சம்பந்தமாக போலீசில் புகார் கொடுத்து இருக்கிறோம் என்று சொல்லப்படும்.

போலீஸ் ஆபிசர் போல பேசுவார்
இதைக் கேட்டவுடன் நீங்கள் ஷாக் ஆகிவிடுவீர்கள். உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்ட் பண்ணுறோம் என ஒரு நம்பருக்கு கனெக்ட் செய்வார்கள். அங்கே போலீஸ் ஆபிசர் போல ஒருவர் பேசுவார்.. பின்னால் வயர்லெஸ் கம்யூனிகேசன் போல ஓடிக்கொண்டு இருக்கும். இதைக்கேட்டு நீங்கள் நம்பிவிடுவீர்கள். உங்களுடைய ஆதார் கார்டு உங்களுடைய பேங்க் ஐடியை வச்சிதான் இந்த மோசடியை செய்து இருக்கிறார்கள். போதைப்பொருளை ஏற்றுமதி செய்து இருக்கிறார்கள். உங்க ஆதாரை பயன்படுத்தி பல கோடி ரூபாய் பணம் வந்துள்ளது.

இன்னொரு நபரிடம் கனெக்ட் பண்ணுவாங்க
உங்கள் மேல் வழக்குப்பதிவு செய்ய போகிறோம். உடனடியாக விசாரணைக்கு வாருங்கள் என கூப்பிடுவாங்க.. இந்த மாதிரி எல்லாம் நான் பண்னவில்லை என்று நீங்கள் மறுத்தாலும் அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. உங்கள் எண்ணை பயன்படுத்திதான் செய்து இருக்கிறார்கள் என்று சொல்வார்கள். தொடர்ந்து பேசும் போது இன்னொரு நபரிடம் கனெக்ட் பண்ணுவாங்க.. நீங்க கவலைப்பட வேண்டாம். நாங்க ஹெல்ப் பண்ணுறோம் என்று மற்றொரு போலீஸ் அதிகாரி சொல்வார்.

ரொம்ப உஷாராக இருங்க
ஒரு பப்ளிக் பிராஸ்கியூட்டரை கனெக்ட் பண்ணுறோம். அவரிடம் பேசுங்கள் என்று சொல்வார்கள். அவரிடம் பேசும் போது நீங்கள் கவலைப்பட வேண்டாம். போலீசை சரி கட்டிவிடலாம். ஒரு லட்சம் ரூபாய் அனுப்புங்கள் என்று சொல்வார். ஒரு லட்ச ரூபாய் கட்டினால் இது போதாது எனக்கூறி மேலும் 5 லட்சம் கேட்பார்கள். இப்படி உங்கள் பணத்தை கட்டாயப்படுத்தி வாங்கிட்டு போய்டுவாங்க. தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 70 புகார்கள் இதுபோல வந்துள்ளது. எனவே ரொம்ப உஷாராக இருங்க" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications