2019ல் எப்படி இருந்தோம்.. 2022ல் எப்படி மாறிட்டோம் பாருங்க.. இந்த ஒற்றை மீம்ஸ் போதும்..
சென்னை: நமக்கு பல வகையில் துன்பங்கள், இன்பங்கள் என்று கொட்டி கொடுத்த 2021-ம் ஆண்டு விடை பெற போகிறது. புத்தாண்டு 2022 பிறக்க போகிறது. பொதுவாக புத்தாண்டு பிறப்பதற்கு முன்பு குதூகலமாக இருப்போம்.
இந்த புத்தாண்டில் இதை செய்ய வேண்டும், இதை செய்யக்கூடாது என்று மனதில் ஒரு தீர்மானம் போட்டு அதனை செயல்படுத்த காத்து கொண்டிருப்போம். ஆனால் கடந்த சில ஆண்டுகள் இவை அனைத்தையும் மாற்றி விட்டது.
இதற்கு எல்லாம் மூல காரணம் கொரோனா என்னும் கொடிய வைரஸ்தான். 2019-ம் ஆண்டு பிறந்து 2020-ம் ஆண்டு பிறக்கும்போது இந்த ஆண்டு நாம் நினைத்தது எல்லாம் நடக்க வேண்டும் என்று புது கனவுடன் புதிய 2020-ம் ஆண்டுக்குள் காலடி எடுத்து வைத்தோம். 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே கொரோனா ஓரளவு அச்சுறுத்தல் கொடுத்து வந்தாலும் 2020 மார்ச்சுக்கு பிறகு நிலைமை அப்படியே தலைகீழாக மாறி விட்டது. இந்த கொரோனா காரணமாக நாம் அந்த வருடம் கொஞ்சநஞ்ச பாடா பட்டோம்.
2020-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு மேலாக லாக்டவுன் என்னும் சிறையில் அடைபட்டு கிடந்தோம். இதனால் பலர் வேலைகளை இழந்தனர். பலரின் தொழில் அடியோடு முடங்கியது. புது ஆண்டில் அப்படி இருக்க வேண்டும்; இப்படி இருக்க வேண்டும் என்று நினைத்து கடைசியில் கொரோனாவில் இருந்து தப்பித்து உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில்தான் இருந்தோம். 2020 கடைசி நமக்கு கொரோனாவில் இருந்து சற்று ஆறுதல் கொடுத்தது.
அதே வேளையில் 2021-ம் ஆண்டை எதிர்கொள்ள நமது மனநிலை முற்றிலும் மாறி விட்டது. முந்தைய ஆண்டை போல நமக்கு சிறப்பு தீர்மானம் எல்லாம் இல்லை. நாட்டு மக்கள் அனைவருக்குமான ஒரே தீர்மானம் கொரோனா நாட்டை விட்டு செல்ல வேண்டும் என்பதுதான். ஆனால் இந்த வருடமும் கொரோனா டெல்டா வைரஸ் என்று உருமாறி ஆட்டிபடைத்தது. அதே உயிரிழப்புகள், அதே வேலையிழப்புகள் என்று பார்த்து மனதை திடப்படுத்திக் கொண்டோம்.
திருச்செந்தூர், ராமேஸ்வரம் கடற்கரைக்கு செல்ல 3 நாட்களுக்குத் தடை - சாமி தரிசனம் செய்ய அனுமதி
இப்போது வரப்போகும் 2022-ம் ஆண்டை எதிர்கொள்ள நாம் முற்றிலுமாக புது விதமாக தயார்படுத்திக் கொண்டோம். 2019-ம் ஆண்டை போல் இப்போது கொண்டாட்ட மனநிலையில் நாம் இல்லை. இந்த டெல்டா, ஓமிக்ரான் வைரசே போதும்; வேறு எந்த வைரஸும் வேண்டாம் என்று காலத்திற்கு ஏற்றார்போல் நமக்கு நாமே ஆறுதல்படுத்திக் கொண்டுள்ளோம். ''2019 எப்படி இருந்தோம்.. 2022ல் எப்படி மாறிட்டோம் பாருங்க'' என்று பலவித விஷயங்களை முன்வைத்து மீம்ஸ்கள் வலம் வருகின்றன. இது வேடிக்கையாக இருந்தாலும் உண்மைதானே. 2019ல் நாம் எப்படி இருந்தோம். இப்போ எப்படி மாறி விட்டோம்.