சின்னம் இல்லாத கட்சியும் பாஜகவும் ஒன்று.. பெரிய வித்தியாசம் இல்லை.. கே.எஸ்.அழகிரி அட்டாக்!
சென்னை: தமிழ்நாட்டில் சின்னம் இல்லாத கட்சிகளுக்கும், பாஜகவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 134வது பிறந்த நாள் விழா காங்கிரஸ் கட்சி தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் அவரது புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.
நேருவின் படத்திற்கு காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, தங்கபாலு, கோபண்ணா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மக்களாட்சி
இதனைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், நாட்டில் மக்களாட்சி அமைய காரணமாக இருந்தவர் நேரு. நாட்டில் இருக்க வேண்டியது மன்னர்கள் ஆட்சியா, நில உடமையாளர்களின் ஆட்சியா, முதலாளிகளின் ஆட்சியா என்ற கேள்வி எழுந்தபோது மக்களாட்சி அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் அதனை இந்தியாவில் அமைத்தவர் ஜவஹர்லால் நேரு.

பொதுத்துறை நிறுவனங்கள்
அவரது ஆட்சிக் காலத்தில் தான் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் உருவாகின. பிஎஸ்என்எல், நெய்வேலி லிக்னைட் கார்பரேஷன் என பல்வேறு நிறுவனங்களை நாட்டுக்கு ஏற்படுத்திக் கொடுத்தவர் நேரு. இன்று உலக அரங்கில் இந்தியா பெரும் பேரோடு இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் ஜவஹர்லால் நேரு தான்.

தனியார்மயம்
உலகிலேயே 2வது பெரிய நிறுவனமாக இந்தியன் ரயில்வே இருக்கிறது. ரயில்வே சொத்துக்கள் அனைத்தும் மக்களுக்கான சொத்தாக உள்ளது. ஆனால், தற்போது இந்தியன் ரயில்வே கொஞ்சம் கொஞ்சமாக தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. ரயில் பெட்டிகள் தனியார் மயமாகின்றன. தண்டவாளங்கள் தனியார் மயமாகின்றன. இப்படியே போனால், மக்கள் சொத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தனியார் சொத்துக்களாக மாறும் என்று விமர்சித்தார்.

பாஜக மீது அட்டாக்
தொடர்ந்து தமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்கள் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில்தான் பேசுவார்கள். புதிதாக தொடங்கப்பட்ட கட்சிக்கு கூட ஆளும் கட்சியாக ஆக வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். தமிழகத்தைப் பொருத்தவரை, சின்னம் இல்லாத கட்சிகளுக்கும் பாஜகவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications