சர்வதேச புத்தக கண்காட்சி தொடக்கம்.. "இங்கு புத்தக விற்பனை கிடையாது" அன்பில் மகேஷ் வைத்த ட்விஸ்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் முதல்முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் நடக்கவுள்ள இந்த கண்காட்சியில், மக்கள் புத்தகங்களை வாங்க முடியாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது நமது தமிழ் புத்தகங்களை சர்வதேச அங்கீகாரத்திற்காக கொண்டு செல்வதற்காக முயற்சி என்று அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
சென்னை ஓஎம்சிஏ திடலில் 2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச புத்தக கண்காட்சி தொடங்கியது. இந்த புத்தக கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இதில் சுமார் 30 நாடுகள் பங்கேற்ற நிலையில் வெளிநாட்டு மொழியில் வெளியான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த புத்தக கண்காட்சிக்காக தமிழ்நாடு அரசு சார்பாக ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நடைபெறும் முதல் சர்வதேச புத்தக கண்காட்சி என்பதால், வாசகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுபஸ்ரீ மரணம்.. தொடரும் ஈஷா மைய மர்மம்! முதலமைச்சரே சொல்லிட்டாரே! அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
அமைச்சர் அன்பில் மகேஷ்
இதன் தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் லியோனி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், தமிழ்நாட்டில் சர்வதேச புத்தக கண்காட்சி முதல்முறையாக தொடங்கியுள்ளது. 3 நாட்கள் நடக்க உள்ள கண்காட்சியில், 30க்கும் அதிகமான நாடுகளில் இருந்து பதிப்பகத்தினர் பங்கேற்றுள்ளனர்.
விற்பனை அல்ல
ஒவ்வொரு அரங்கு முன்பும் எந்த நாடு என்பதை குறிக்கும் வகையில் கொடியும், நாட்டின் பெயரும் எழுதப்பட்டுள்ளது. அதேபோல் அந்த நாட்டில் என்ன புத்தகம் பிரபலமாக இருக்கிறதோ, அதனை அரங்கில் வைத்துள்ளோம். சர்வதேச புத்தக கண்காட்சி என்பது புத்தக விற்பனைக்கானது அல்ல. பபாசி அமைப்பு சார்பாக 45க்கும் மேலான ஆண்டுகளாக புத்தக கண்காட்சி நடக்கிறது. ஆனால் இது, புத்தக விற்பனை அல்லாமல், ஒவ்வொரு நாட்டிலும் பிரபலமான புத்தகத்தை அறிமுகம் செய்வதற்காக அமைக்கப்பட்ட அரங்கு தான்.
மொழிபெயர்ப்பு
இங்கு விற்பனை என்பது அரசுக்கும் - பதிப்பகத்திற்கும் இடையே மட்டுமே நடக்கும். நமது புத்தகத்தை அவர்களும், அவர்கள் புத்தகத்தை அரசும் வாங்குவதற்காக நடவடிக்கை மட்டுமே இருக்கும். நமது மொழியில் இருந்து குறைந்தது 30 புத்தகங்களை மொழி பெயர்த்து விற்பனை செய்ய முயற்சிக்கிறோம். அதேபோல் வெளிநாட்டில் இருந்து 50 புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்க முயற்சிக்கிறோம்.
இலக்கியத்திற்கு முக்கியத்துவம்
இங்கு பார்வையாளர்கள் பார்வையிடுவதற்கு மாலை நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எந்த டிக்கெட்டும் கிடையாது. குறிப்பாக இலக்கியம் சார்ந்த புத்தகங்கள் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மருத்துவ படிப்பு தொடர்பான புத்தகங்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளது என்று தெரிவித்தார்.