மாண்டஸ் புயல் எதிரொலி.. சென்னையிலிருந்து இன்று இரவு அரசுப் பேருந்துகள் ரத்து.. தமிழக நிலவரம் என்ன?
சென்னை: மாண்டஸ் புயல் எதிரொலியால் சென்னையிலிருந்து இன்று இரவு அரசு பேருந்து ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது போல் மாநகர பேருந்துகளும் இன்று இரவு இயங்காது.
மாண்டஸ் புயல் தற்போது சூறாவளி புயலில் இருந்து புயலாக மாறியுள்ளது. இந்த புயல் இன்று இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இதனால் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு அதிக கனமழை பெய்யும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாண்டஸின் தாக்கத்தால் தமிழகத்தில் ஆங்காங்கே கனமழை கொட்டி வருகிறது. சென்னையில் விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் இன்று மாலைமுதல் மக்கள் யாரும் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
குறுக்கே வந்த 'மாண்டஸ்' புயல்.. 6 மாவட்டங்களில் பேருந்துகள் ரத்து.. விமானங்களும் ரத்து.. முழு விவரம்
மாண்டஸ் புயல்
மாண்டஸ் புயல் எதிரொலியாக புதுவை, சென்னை, நாகை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர், விழுப்புரம், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். அது போல் நீச்சல் வீரர்களும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் மாண்டஸ் புயலின் தாக்கத்தால் ஆங்காங்கே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
கரையை கடக்கும்போது காற்று வீசும்
கரையை கடக்கும்போது காற்று அதிக அளவுக்கு வீசும் என்பதால் மின் இணைப்புகள் துண்டிக்கப்படும். இரவு நேரங்களில் மரத்தின் கீழ் நிற்க வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் கடல் அரிப்பால் 10க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகிவிட்டன.
3 நாட்கள் மீன் பிடிக்க செல்லவில்லை
மீனவர்கள் கடல் கொந்தளிப்பு காரணமாக 3 நாட்களாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. வலைகளையும் படகுகளையும் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்கிறார்கள். இன்று இரவு புயல் கரையை கடக்கும் நேரத்தில் பயணங்களை தவிர்த்துவிடுமாறு அறிவுறுத்தல்கள் வந்துள்ளன.
அரசு பேருந்துகள் இயங்கும்
தமிழகத்தில் அரசு பேருந்துகள் இயங்கும். ஆனால் கடலோர மாவட்டங்களில் புயல் கரையை கடப்பதற்கு முன்பாக 3 மணி நேரம், பின்பாக மூன்று மணி நேரம் என பேருந்துகள் இயக்கப்படாது. சென்னையிலிருந்து இன்று இரவு செல்லும் அரசு பேருந்துகளும் நகரப் பேருந்துகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அது போல் ஆம்னி பேருந்துகளும் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.