ஒருங்கிணைப்பாளர் பதவியே அதிமுகவில் இல்லை.. நேற்று வரைதான்.. இனி ‘நோ' - சி.வி.சண்முகம் சூசக பேச்சு!
சென்னை : எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், முன்னாள் ஒருங்கிணைப்பாளர் தற்போது பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் என்றும், முன்னாள் துணை ஒருங்கிணைப்பாளர் தற்போது மாவட்ட செயலாளர் வைத்திலிங்கம் எனக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.
இதன் மூலம் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டுவிட்டதாக சி.வி.சண்முகம் சூசகமாகத் தெரிவிக்கிறாரா எனக் கேள்வி எழுந்துள்ளது.
மேலும், பேசிய சி.வி.சண்முகம், மொத்த பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பங்கினர் கையெழுத்திட்டால் பொதுக்குழுவை கூட்டலாம். பொதுக்குழு கூட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அனுமதி வேண்டும் என்ற விதி இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி ஆலோசனை
நேற்று நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கூறி வரும் நிலையில், பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை வைத்து ஒற்றைத் தலைமை பதவியை கைப்பற்றுவதில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர். எடப்பாடி பழனிசாமி அடுத்த மாதம் நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டம் தொடர்பாகவும் அதில் ஒற்றைத் தலைமை பதவியை ஏற்பது பற்றியும் வியூகம் வகுத்து வருகிறார்.

அவசர மீட்டிங்
ஓபிஎஸ் தரப்பினர் டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தில் பொதுக்குழு செல்லாது என உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ள நிலையில், சென்னையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி, கே.சி.வீரமணி, ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜு, கே.பி.அன்பழகன், வளர்மதி, வைகைச்செல்வன், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

சி.வி.சண்முகம்
எடப்பாடி பழனிசாமி உடனான ஆலோசனைக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய சி.வி.சண்முகம், ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தார். சி.வி.சண்முகம் பேசுகையில், "அதிமுக அவைத்தலைவர் தேர்வு செல்லாது என்று வைத்திலிங்கம் கூறியது தவறு. அதிமுகவின் சட்டவிதி 19ன் படி முறையாக பொதுக்குழுவை கூட்டினோம்.

பொதுக்குழுவை கூட்டலாம்
ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழு கூட்டப்பட வேண்டும் என்பது விதி. மொத்த பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பங்கினர் கையெழுத்திட்டால் பொதுக்குழுவை கூட்டலாம். பொதுக்குழு கூட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அனுமதி வேண்டும் என்ற விதி இல்லை. 5ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் கோரினால் பொதுக்குழுவை கூட்ட வேண்டியது ஒருங்கிணைப்பாளர்களின் கடமை.

அவைத்தலைவர்
நேற்று நடந்த பொதுக்குழுவுக்கு, ஓ.பி.எஸ் கையெழுத்தோடு அழைப்பு கொடுக்கப்பட்டது. தான் கையெழுத்தே போடவில்லை என்கிறாரா ஓ.பன்னீர்செல்வம்? தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனை வழிமொழிகிறேன் என பன்னீர் செல்வமே மேடையில் சொன்னாரா இல்லையா? உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு பஞ்சாயத்து செய்யும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை; தேர்தல் ஆணையத்திற்குத்தான் உண்டு." எனத் தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைப்பாளர் இல்லை
மேலும், இந்த செய்தியாளர் சந்திப்பின்போது சி.வி.சண்முகம் பேசுகையில், முன்னாள் ஒருங்கிணைப்பாளர் தற்போது பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் துணை ஒருங்கிணைப்பாளர் தற்போது மாவட்ட செயலாளர் வைத்திலிங்கம்." எனக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். இதன் மூலம் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டுவிட்டதாக சி.வி.சண்முகம் சூசகமாகத் தெரிவிக்கிறாரா எனக் கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications