ஓபிஎஸ்-ஐ ஓரங்கட்டும் திட்டமா? “அவரே தனிமைப்படுத்திக் கொள்ள நேரிடும்” - இன்றும் பொங்கிய ஜெயக்குமார்!
சென்னை : ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டும் திட்டம் இல்லை என்றும், பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்காவிட்டால் தனிமைப்படுத்திக் கொள்ள நேரிடும் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் புயலை கிளப்பி இருக்கும் நிலையில், கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று காலை பரபரப்பாக தொடங்கிய நிலையில் எந்தத் தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் கலைந்தது.
ஒற்றைத் தலைமை விவாதத்தை பொதுவெளியில் தொடங்கி வைத்த ஜெயக்குமார் இன்றைய பொதுக்குழுவிலும் ஒற்றைத் தலைமை நாயகர் ஈபிஎஸ் எனப் பேசியுள்ளார்.
அதிமுக ஒற்றை தலைமைக்கான தலைவர் இபிஎஸ் தான்! இன்றைய எழுச்சி திமுகவுக்கான சாவு மணி! எஸ்பி வேலுமணி பரபர
பொதுக்குழு தொடங்கியது முதலே குழப்பம்
பொதுக்குழு தொடங்கியது முதலே எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஒற்றைத் தலைமை முழக்கத்தை முன்வைத்து வந்தனர். ஓ.பன்னீசெல்வம் பொதுக்குழுவிற்கு வந்தபோதும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கோஷம் எழுப்பி வந்தனர். பொதுக்குழுத் தீர்மானங்களை நிறைவேற்றித் தர வேண்டும் என்று ஓபிஎஸ் கோரிக்கைவைத்த நிலையில், அதை வழிமொழிந்தார் எடப்பாடி பழனிசாமி. அப்போது சி.வி.சண்முகம், 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிக்கிறது என ஆவேசமாக அறிவித்தார்.
ஒற்றை தலைமை நாயகர்
அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் அதிமுக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான தீர்மானத்தை இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி மேடையில் அறிவித்தார். அதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயகுமார் ஆகியோர் வழிமொழிந்தனர். அப்போது ஜெயக்குமார், "இப்போதைய இணை ஒருங்கிணைப்பாளரும், ஒற்றைத் தலைமை நாயகருமான எடப்பாடி பழனிசாமி" என்று குறிப்பிட்டுப் பேசினார். அப்போது எடப்பாடி ஆதரவாளர்கள் ஆரவாரம் செய்தனர்.
கலைந்த கூட்டம்
ஒற்றைத் தலைமை குறித்து எடப்பாடி ஆதரவாளர்களின் அமளியால் பொதுக்குழு பாதியில் கலைந்தது. பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று ஜூலை 11ல் அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தவுடன், பொதுக்குழு மேடையில் இருந்து ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் பொதுக்குழுவைப் புறக்கணித்து அங்கிருந்து வெளியேறினர். அப்போதும், அரங்கில் இருந்தவர்கள் தொடர்ச்சியாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
முற்றுப்புள்ளி
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், "திட்டமிட்டபடி இன்று பொதுக்குழு நடைபெற்றது போல், ஜூலை 11ஆம் தேதியும் பொதுக்குழு நடைபெறும். ஒற்றைத் தலைமை விவகாரத்துக்கு ஜூலை 11ல் முற்றுப்புள்ளி வைக்கப்படும். ஒற்றைத் தலைமை குறித்து இன்றே விவாதிக்க வேண்டும் என்பது பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணம்" எனத் தெரிவித்துள்ளார்.
ஓரங்கட்டவில்லை
மேலும் பேசிய அவர், "ஓபிஎஸ்ஸை அவமானப்படுத்துவது எங்கள் நோக்கம் இல்லை. யாரையும் இழக்க நாங்கள் தயாரில்லை. அதே நேரத்தில் கட்சித் தொண்டர்கள், பொதுக்குழு உறுப்பினர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டும் திட்டம் இல்லை. பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்காவிட்டால் தனிமைப்படுத்திக் கொள்ள நேரிடும்" எனத் தெரிவித்துள்ளார்.
ஜெயக்குமார்
சமீபத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை விவாதம் எழுந்தது. அதுகுறித்து வெளியில் தெரிவிக்க வேண்டாம் என உத்தரவிடப்பட்ட நிலையிலும், செய்தியாளர்களைச் சந்தித்து வெளிப்படையாக தெரிவித்தார் ஜெயக்குமார். இந்நிலையில், இன்று மேடையிலும் ஒற்றைத் தலைமை நாயகர் ஈபிஎஸ் எனப் பேசிய ஜெயக்குமார், ஓபிஎஸ் தனிமைப்படுத்திக் கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.