நெல்லை டூ பெங்களூர்.. 6 மணி நேரம்தான்.. ஒரு கேள்வி கிடையாது.. கொரோனாவை நாம் இப்படித்தான் ஒழிக்கிறோம்
சென்னை: காலை 4 மணிக்கு நெல்லையிலிருந்து, எஸ்யூவி கார் ஒன்று கிளம்புகிறது. உள்ளே கார் ஓட்டும் நபரைத் தவிர, அவரது குடும்பத்தினர் சிலர் அமர்ந்து உள்ளனர். அதிகாலை நேரம் என்பதால் டீ, காபி மட்டுமே குடித்துவிட்டு அவர்களின் பயணம் தொடங்குகிறது..
Recommended Video
அப்படியே கட் செய்தால், காலை 10 மணிக்கெல்லாம், பெங்களூரில் அவரின் உறவுக்காரர் வீட்டில் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். 6 மணி நேரம்தான். அதற்குள்ளாக சுமார் 600 கிலோமீட்டர் கடந்து பெங்களூர் வந்தாகிவிட்டது.
எங்குமே டோல்கேட் கட்டணம் கிடையாது.. வாகன போக்குவரத்து குறைவாக இருக்கிறது.. இதனால் வேகமாக வந்து இருக்கலாம் என்றாலும், நடுவே நான்கு இடங்களில் போலீசார் நிறுத்தி சோதித்துப் பார்த்தால் கூட, இவ்வளவு துரிதம் சாத்தியம் இல்லை.
தென் மாநிலங்களில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் மிக அதிகமாக இருக்கிறது. நேற்றைய நிலவரப்படி, தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1000த்தை தாண்டிவிட்டது.
தமிழக ஹைவே நிலவரத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் அந்த பிரமுகர். நெல்லையை தாண்டி 20 கிலோமீட்டர் தூரத்திற்குள் சங்கர் நகர் பகுதியில் ஒரு முறை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, எங்கே செல்கிறீர்கள் என்றனர். "கண்ணாடியின் மீது பாஸ் ஒட்டப்பட்டுள்ளது, பாருங்கள்" என்று பதில் சொன்னோம். பார்த்தனர், மறுபேச்சின்றி, கிளம்பிப் போக சொன்னார்கள்.
அடுத்து வேறு எங்குமே ஸ்டாப் கிடையாது. தருமபுரி அருகே தொப்பூர் பகுதியில், அதாவது சுமார் 400 கிலோமீட்டர் கடந்து பிறகு, அடுத்ததாக சில போலீசார் வழிமறித்தனர். அங்கும் அதே கேள்வி. அதே பதில். பாஸை பார்த்ததும், அப்படியே அனுப்பி வைத்தனர். அதனால்தான் இவ்வளவு வேகமாக பெங்களூர் வந்து சேர முடிந்தது என்கிறார் அவர்.
நம்மிடம் பேசிய நபர், ஒரிஜினல் பாஸ் வைத்துதான் பயணம் மேற்கொண்டார். ஆனால் எத்தனை பேர் போலி பாஸ்கள் அல்லது கலர் ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு வண்டி ஓட்ட முடியும் என்பதை நினைத்துப் பாருங்கள். கர்நாடகா பார்டர் வந்த பிறகு, கர்நாடக அதிகாரிகள் தெர்மல் ஸ்கேனர் மூலமாக உடல் வெப்பநிலையை பார்த்துள்ளனர். தமிழகத்தில் அதுவும் பார்க்கப்படவில்லை.
இந்த நோய் ஒருவருக்கு இருந்தால் கூட அது மீண்டும் பலருக்கும் பரவக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அப்படி இருக்கும்போது, கர்நாடக காவல்துறை எடுத்து வரும் நடவடிக்கைகளை பாதி கூட தமிழக காவல்துறை எடுக்காதது ஏன் என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன. தமிழகத்தின் பல இடங்களிலும் மக்கள் சாலைகளில் நடந்து செல்வது, முகக்கவசம் அணியாமல் செல்வது போன்றவற்றையும் காரில் பயணித்தோர் கவனித்துள்ளனர். ஆங்காங்கு, ஹைவேக்களிலும் போலீசார் நிறுத்தப்படுவதும் உரிய வாகன சோதனையும், நோய் பரவலை கட்டுப்படுத்தும் என்பதுதான் மக்களின் கோரிக்கையாக உள்ளது.