மேகதாது அணை தொடர்பாக பேச்சுவார்த்தை கிடையாது.. கர்நாடக அரசின் கோரிக்கையை நிராகரித்தது தமிழகம்
சென்னை: மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த தகவலை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உறுதிபட தெரிவித்தார்.
காவிரிக்கு குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் புதிதாக அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு பூர்வாங்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய, சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிலையில், கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று அதற்கு பதிலடி வழங்கியுள்ளார். அவர் தமிழ் செய்தி சேனல் ஒன்றிடம் கூறியதாவது: மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கியதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம்.
காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவுப்படியும், இது தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படியும், கர்நாடகா தன்னிச்சையாக காவிரிக்கு குறுக்கே அணை கட்ட முடியாது.
நதிநீர் பங்கீடு தொடர்பாகவோ அல்லது புதிதாக அணை கட்டுவதாக இருந்தாலும் காவிரி மேலாண்மை வாரியம் மூலமாகத்தான் செயல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை தெரிந்திருந்தும், மத்திய நீர்வளத்துறை ஆணையம், இந்த விஷயத்தில், தனக்கு அதிகாரம் இல்லை என்று தெரிந்தும், கர்நாடக அரசின் கோரிக்கைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி வாங்கி விட்டு, இப்போது வந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பது ஏற்புடையது அல்ல. எனவே கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை கிடையாது. காவிரியை வைத்து அரசியல் செய்வது கர்நாடகாவிற்கு எப்போதுமே வாடிக்கையாகி வருகிறது. இதை நீதிமன்றத்தில், சந்தித்து மீண்டும் வெற்றிக் கொடியை நாட்டுவோம். இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.