மக்களே ரிலாக்ஸ்.. மாலை தொடங்குகிறது கனமழை! ஆனால்? குட் நியூஸ் சொன்ன வானிலை மையம்
சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் கனமழை மட்டுமே பெய்யும் எனவும் மிக கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
வங்கக்கடலில் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மையம் கொண்டு இருந்தது. இன்று காலை 5.30 மணி அளவில் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
தற்போது இது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கு கிழக்கே 600 கிமீ தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 630 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 670 கிமீ தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.

48 மணி நேரத்தில் நகரும்
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலின் அதே பகுதியில் நீடிக்கும் எனவும், அதன் பிறகு மெதுவாக மேற்கு - வடமேற்கு திசையிலும், புதுச்சேரி - தமிழ்நாடு - தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி அடுத்த 48 மணி நேரத்திலும் நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட மாவட்டங்கள்
இதன் காரணமாக வட தமிழக மாவட்டங்களில் இன்று மாலைக்கு பிறகு மழை தொடங்கும் எனவும், இன்று வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வும் மையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

அடுத்த 2 நாட்கள்
அதன் பிறகு படிப்படியாக மழையின் அளவு அதிகரித்து, நவம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் வட தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றின் வேகம்
காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி, இலங்கையை ஒட்டிய கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், 20 முதல் 22 ஆம் தேதி வரை மீனவர்கள் இந்த பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை மையம்
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், "நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டு உள்ளது."

நகரும் மண்டலம்
"காரைக்காலில் இருந்து சுமார் 630 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு - தென்கிழக்கேயும், சென்னையில் இருந்து சுமார் 670 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு - தென்கிழக்கேயும் மையம் கொண்டுள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம் - புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும்." என்று கணிக்கப்பட்டு உள்ளது












Click it and Unblock the Notifications