கெஞ்சும் நிலைதான்.. அள்ளி தரும் நிலை இல்லை.. நல்ல தலைவரும் இல்லை.. இதுதான் இவர்களின் துயரம்!
சென்னை: காங்கிரஸ் கட்சி இன்று தலையில்லா கட்சியாக திகழ்கிறது. குறிப்பாக அகில இந்திய அளவில் பார்த்தால் ராகுல் காந்தி அனைவராலும் ஏற்கப்படாத தலைவராகவே வலம் வருகிறார். மறுபக்கம் தமிழகத்தைப் பார்த்தால் இன்னும் நிலைமை பரிதாபம்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளன. குழப்பங்கள் உள்ளன. இதை யாரும் மறுக்க முடியாது. ஏன காங்கிரஸாரே கூட மறுக்க முடியாது.
முன்பு போல மக்களின் அபிமானம் பெற்ற, மக்கள் நெஞ்சங்களில் நிறைந்த, சொந்த செல்வாக்குடன் கூடிய தலைவர்கள் இப்போது இல்லை. உதாரணத்திற்கு மூப்பனார் இருந்தபோது காங்கிரஸ் கட்சியின் நிலையே வேறு. திமுக உள்ளிட்ட கட்சிகளும் காங்கிரஸை அப்படி மதித்தன. மூப்பனாரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு காங்கிரஸார் நடந்து கொண்டனர். அவர் கிழித்த கோட்டை யாரும் தாண்ட முயற்சித்ததில்லை.
மூளைவளர்ச்சி' இல்லாத காங்கிரஸ்... குஷ்புவுக்கு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு கண்டனம்!!
செல்வாக்கு
மூப்பனாரின் செல்வாக்கும் சிறப்பாக இருந்தது. சொந்த செல்வாக்கால் காங்கிரஸை வழி நடத்தி வந்தார் மூப்பனார். டெல்லி வரை அவரது செல்வாக்கு கொடி கட்டிப் பறந்தது. அப்போதும் கூட கோஷ்டி பூசல்கள் இல்லாமல் இல்லை. வாழப்பாடி ராமமூர்த்தி ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் மூப்பனார். ஆனாலும் அவர்கள் கட்சியின் நலன் கெட்டுப் போகும் அளவுக்கு மோதி கொண்டதில்லை. கட்சியின் வளர்சிக்கு மூப்பனார் எந்த அளவுக்கு பாடுபட்டாரோ அதே அளவில்தான் வாழப்பாடியாரும் செயல்பட்டார்.
காவிரி நீர்
பின்னர் வாழப்பாடியார் தலைவராக இருந்தபோதும் அதேபோலத்தான். கட்சியை அப்படி கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். பிரமாதமாக தலைமை தாங்கி நடத்தினார். மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார். மக்களுக்காகத்தான் பதவிகள், அதிகாரங்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் காவிரி பிரச்சினையின்போது தனது பதவியை தூக்கி எறிந்து வரலாறு படைத்தார. மக்கள் நெஞ்சங்களில் நிரந்தரமாக இடம் பிடித்தார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன்
இவர்களுக்கு பின்னர் எந்தத் தலைவரும் இப்படி மக்களை கட்டிப்போட்டதாக காங்கிரஸில் இல்லை என்பது வருத்தமான உண்மை... அன்று இருந்தார்கள்.. ஈவிகேஎஸ் இளங்கோவன் போன்றோர் இருக்கத்தான் செய்தனர். ஆனால் காங்கிரஸின் இழந்த செல்வாக்கை திரும்ப பெற அவர்களாலும் முடியில்லை.. இன்று திமுக அல்லது அதிமுகவிடம் இத்தனை சீட் கொடுங்க என்று கேட்டு கெஞ்சும் நிலையில்தான் காங்கிரஸ் உள்ளதே தவிர, "நீங்க எங்களுக்கு முக்கியம் இத்தனை சீட்டையும் நீங்க எடுத்துக்கங்க, வாங்க" என்று வந்து கேட்டுக் கெஞ்சும் நிலையில் அவர்கள் இல்லை என்பதே எதார்த்தம்.
நம்பிக்கை
காங்கிரஸுக்கென்று தமிழகத்தில் தனி பாரம்பரியம் உண்டு, வரலாறு உண்டு. அது இன்னும் கூட முழுமையாக கரைந்து போய் விடவில்லை. ஆனால் தலைவர்கள் இல்லாமல் அக்கட்சி தடுமாறிக் கொண்டுள்ளது. அதை சரி செய்தால் மட்டுமே மீண்டும் அது தலை நிமிர்ந்து நடக்க முடியும்.. இல்லாவிட்டால் அது தேறுவது கஷ்டம்தான்.