வடகிழக்கு பருவமழை இதுவரை இயல்பை விட 3% குறைவு..டிச.8க்கு மேல் அதி கனமழை ஆட்டம் ஆரம்பம்
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 1 முதல் டிசம்பர் 5 வரையான காலத்தில் இயல்பை விட 3 சதவீதம் குறைவாக பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 5 வரையிலான காலகட்டத்தில் இயல்பான மழை அளவு 377.3 மி.மீ. ஆகும். எனவே, இயல்பை விட 3 சதவீதம் குறைவாக 367.1 மி.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. டிசம்பர் 8ஆம் தேதிக்கு மேல் சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை காலமாகும். கடந்த ஜூன் 11ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. பருவமழை தொடங்கியதில் இருந்தே மும்பை, புனே உட்பட பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. பல இடங்கள் வெள்ளம் நிறைந்தது. மழை நிற்க வேண்டிய காலங்களிலும், தொடர்ந்து மழை பெய்து வந்தது. இந்த ஆண்டு இயல்பை விட அதிக அளவு மழை பெய்துள்ளது.
இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை கேரளாவில் பெய்யத் தொடங்கியதில் இருந்தே தமிழகத்திலும் மழை பெய்து கொண்டே இருந்ததால் பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ஆம் தேதி தொடங்கி ஜனவரி மாதம் வரை பெய்யும். கடந்த ஆண்டில் அக்டோபர் 25 ஆம் தேதி பருவமழை ஆரம்பமானது. அதனால் அதிக அளவி்ல் தமிழகத்துக்கு மழை கிடைத்தது.
மாண்டஸ் புயல்: டிசம்பர் 8ஆம் தேதி அதி கனமழை.. தமிழகத்திற்கு ரெட் அலர்ட்- வானிலை மையம் வார்னிங்
வடகிழக்கு பருவமழை
இந்த ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. நடப்பாண்டு வடகிழக்குப் பருவமழை 88 சதவிகிதம் 112 சதவிகிதம் என்ற அளவில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. நவம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாகவே பெய்திருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பருவமழை ஓய்வெடுத்து வருவதால் இயல்பை விட 3 சதவிகிதம் குறைவாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஒரு சில மாவட்டங்களிலே அதிக மழை பெய்தது. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. குறிப்பாக கடந்த 10 நாட்களாக வட மாவட்டங்களில் போதிய மழை இல்லை.
பருவமழை எங்கு அதிகம்
ஈரோடு மாவட்டத்தில் இயல்பான மழையின் அளவு 277.8 மி.மீ. ஆகும். இயல்பை விட 63 சதவீதம் அதிகமாக 453.4 மி.மீ. மழை பொழிந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இயல்பை விட 42 சதவீதம் அதிகமாக மாலை பெய்துள்ளது. மேலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் இயல்பை விட 26 சதவீதம் கூடுதலாக மழையின் அளவு பதிவாகியுள்ளது.
பருவமழை எங்கு குறைவு
திருப்பூர் மாவட்டத்தில் இயல்பை விட 28 சதவீதம் கூடுதலாக மழை பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், வேலூர், திருவாரூர், அரியலூர், நீலகிரி, நாகப்பட்டினம், தூத்துக்குடி மற்றும் திருச்சி உள்பட 24 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாக மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
இந்த நிலையில் மீண்டும் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகி உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளது. இதனால் நாளை முதல் மழை பெய்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நாளை மறுநாள் மாலையில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தென் கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தொடர்ந்து மேற்கு வடமேற்கில் நகர்ந்து படிப்படியாக புயலாக வலுபெற்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய கடற்கரைப் பகுதியில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூறாவளி காற்று வீசும்
எனவே, மீனவர்கள் நாளை முதல் தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏனெனில், மணிக்கு 60 முதல் 70 கி.மீ வரை சூறாவளி புயல் காற்று வீசும் என்ப தால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் கடலோர மாவட்டங்களிலும் உஷார் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
ரெட் அலர்ட் விடுப்பு
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 8ம் தேதி அதே திசையில் நகர்ந்து புயலாக உருவெடுக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த புயலுக்கு தான் மாண்டஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 8ஆம் தேதி முதல் அதிகனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. அன்றைய தினம், தமிழகம் மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் 60 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது.