வடக்கு பற்றி எரியுது.. தமிழ்நாட்டில் ஏன் அக்னிபத் போராட்டங்கள் இல்லை? - திமுக எம்.பி சொல்லும் பதில்!
சென்னை : அக்னிபத் திட்டத்திற்கு வடநாடு பற்றி எரிகிறது. ஆனால் தமிழ்நாட்டில் ஒன்றுமே எதிர்ப்பில்லையே, ஏனென்றால், அவர்களது குறைந்தபட்ச பள்ளிப் படிப்பிற்கு கிடைக்கும் அரசு வேலையாக ராணுவப் பணிகளையே நம்பியுள்ளனர் என தி.மு.க எம்.பி எம்.எம்.அப்துல்லா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் போராட்டங்கள் கொளுந்து விட்டு எரிந்து வருகின்றன. ரயில் நிலையங்கள் பல தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.
நீட் வந்த போது தமிழ்நாடு கொதித்தது, ஆனால் வடநாட்டில் சலசலப்பு இல்லை, இப்போது அவர்களது பணி ஆதாரமான ராணுவத்தில் கை வைத்துள்ளதால் வடநாடு கொதிக்கிறது என மாநிலங்களவை எம்.பி எம்.எம்.அப்துல்லா தெரிவித்துள்ளார்.

அக்னிபத்
மத்திய பாஜக அரசு புதிதாக அக்னிபத் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ராணுவத்தில் ஆட்களை சேர்க்கும் மத்திய அரசின் நான்கு ஆண்டு திட்டத்திற்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. 17.5 வயது முதல் 21 வயது வரை ராணுவத்தில் இணைந்து பணியாற்றலாம், 4 ஆண்டுகளுக்குப் பிறகு 25 சதவீத இளைஞர்கள் மட்டுமே நிரந்தரம் ஆக்கப்படுவார்கள் என்ற மத்திய அரசின் அறிவிப்பை வன்மையாக கண்டித்துள்ள வட மாநிலத்தினர், இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீவைத்து எரிப்பு
அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. குறிப்பாக, பீகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ஹரியானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் போராட்டக்காரர்கள். பீகாரில் பல ரயில் நிலையங்களை போராட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். இதனால், பீகார் முழுவதும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

தென் மாநிலங்களில்
தென்னிந்தியாவில் தெலுங்கானாவில் போராட்டம் வெடித்துள்ளது. செகந்திராபாத் ரயில் நிலையத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள், அங்கு நின்று கொண்டிருந்த ரயில்களுக்கு தீ வைத்ததுடன் ரயில் நிலையங்களை அடித்து நொறுக்கினர். இதனால், அம்மாநிலத்திலும் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனிடையே, போராட்டத்தைக் கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், அக்னிபத் திட்டத்தில் ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை 21ல் இருந்து 23 ஆக அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

திமுக எம்பி கண்டனம்
இந்நிலையில், அக்னிபத் திட்டம் குறித்து தி.மு.கவை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி எம்.எம்.அப்துல்லா தனது கருத்தை ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். அவரது ஃபேஸ்புக் பதிவில், நான் ஏன் அக்னிபாத் திட்டத்தை எதிர்க்கிறேன் என்றால், நாம் அமைதியாக வாழ உயிரைப் பணயம் வைத்து வாழும் ஒருவனுக்கு குறைந்தபட்ச பணிப் பாதுகாப்பு கூட இல்லாது "கான்டிராக்ட் லேபர்" போல நடத்துவது அநீதி எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் எதிர்ப்பு இல்லையா?
மேலும், "அக்னிபத் திட்டத்திற்கு வடநாடு பற்றி எரிகிறது. ஆனால் தமிழ்நாட்டில் ஒன்றுமே எதிர்ப்பில்லையே!!? வடநாட்டில் படிக்கும் வாய்ப்புகள் மிகக் குறைவு. எனவே அவர்களது குறைந்தபட்ச பள்ளிப் படிப்பிற்கு கிடைக்கும் அரசு வேலையாக ராணுவப் பணிகளையே நம்பியுள்ளனர். தமிழகத்தில் படிக்கும் வாய்ப்பு மிக மிக அதிகம். எனவே இங்கு டாக்டர்களாக என்ஜினியர்களாக ஆடிட்டர்களாக வக்கீல்களாக உருவாகிறோம். இதானால் தான் நீட் வந்த போது வடநாட்டில் சலசலப்பு இல்லை. ஆனால், தமிழ்நாடு கொதித்தது! அவர்களுக்கு சோறு ராணுவத்தில் உள்ளது அவர்கள் கொதிக்கிறார்கள். நாம் கொதிக்கவில்லை. நமக்கு சோறு படிப்பில் உள்ளது. நீட்டிற்கு நாம் கொதிக்கிறோம். அவர்கள் கொதிக்கவில்லை." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications