"தேங்க் யூ ஸ்டாலின்.." வட இந்தியர்களும் வரிசையாக வாழ்த்து..ஓபிசி இட ஒதுக்கீட்டால் குவியும் பாராட்டு
சென்னை: மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அகில இந்திய கோட்டாவில் 27% இட ஒதுக்கீட்டை இந்த வருடம் முதல் செயல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
என்னதான், மத்திய அரசு உத்தரவிட்டாலும் அதன் பின்னணியில் திமுகவின் சட்டப் போராட்டம் மற்றும் நாடாளுமன்றத்துக்குள் குரல் எழுப்பியது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் அடங்கியுள்ளன.
பாஜகவின் செம பிளான்.. உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிடம்.. 5 மாநகராட்சிகளை கேட்க திட்டம்?
இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு நீண்டகாலமாக இழுத்தடிப்பு செய்து வந்த நிலையில் நீதிமன்றத்தில் முதல்முறையாக பொதுநல வழக்கு தொடர்ந்தது திமுக.
தலைப்பு செய்திகள்
பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் 27% இட ஒதுக்கீடு தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டது, நாடு முழுக்க டிரெண்டிங் விஷயமாக மாறிவிட்டது. இன்று பெரும்பாலான முன்னணி ஆங்கில நாளிதழ்களில் 27% இட ஒதுக்கீடு என்பது தான் தலைப்புச் செய்தியாக வந்திருக்கிறது.
ஸ்டாலினை தலைவராக ஏற்ற வட இந்தியர்கள்
இட ஒதுக்கீடு கிடைத்தது, பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கு மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம் என்ற போதிலும், இதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதை மக்களும் விசாரிக்க தொடங்கினர். பழைய நிகழ்வுகளை புரட்டிப் பார்க்க தொடங்கினர். அப்போதுதான் திமுக எடுத்த முன்னெடுப்புகள் விவரமாக அவர்கள் கைகளுக்கு கிடைத்தது. பொதுவாக திராவிட கட்சிகள், கல்வி, மருத்துவம் , சமூக நீதி ஆகிய கொள்கைகளில் மிகவும் தீவிரம் காட்டக் கூடியவை என்பது வட இந்தியாவைச் சேர்ந்த பலரும் கேள்விப்பட்ட தகவலாகத்தான் இருந்தது. இந்த முறையை அவர்கள் இதை கண்கூடாக பார்த்ததால் மகிழ்ச்சியில், "ஸ்டாலின் தான் எங்கள் தலைவர்" என்று டுவிட்டரில் டிரெண்ட் செய்ய ஆரம்பித்து விட்டனர்.
தமிழக கட்சிகளுக்கு சபாஷ்
காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் இந்த விஷயத்தில் பெரிய முன்னெடுப்பை எடுக்காத நிலையில், திராவிடக் கட்சி அதுவும் குறிப்பாக திமுக மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகளான, பாமக, விடுதலை சிறுத்தைகள் போன்றவை ஓரணியில் நின்று இந்த இட ஒதுக்கீட்டுக்காக போராடியதை வட இந்தியர்கள் தற்போது தான் படித்து பார்த்து தெரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள் . தங்களது ட்விட்டர் பதிவுகளில் இந்த தகவல்களை அவர்கள் தெரிவிப்பதை பார்க்க முடிகிறது.
வட இந்தியர்கள் நன்றி
வட மாநிலத்தைச் சேர்ந்த திலிப் மண்டல் என்ற பத்திரிக்கையாளர் இந்தியாவே, ஸ்டாலினுக்கு நன்றி சொல்கிறது என்று ட்வீட் செய்துள்ள நிலையில், வட இந்தியர்களும் ஸ்டாலினை பாராட்டுகிறார்கள். தமிழகத்திற்கு பெருமையான தருணம் என்று அதை ரீட்வீட் செய்துள்ளார் இன்னொரு டுவிட்டர் பெண் பிரபலம். திலிப் மண்டல் ட்வீட் ஆயிரக்கணக்கான லைக்ஸ் செய்யப்பட்டிருக்கின்றது. இது தவிர தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இணைந்து தேங்க்யூ ஸ்டாலின் என்ற பெயரில் டுவிட்டரில் ஹேஸ்டேக் செய்து வருகின்றனர். திமுக ஆதரவாளர்கள்தான் வழக்கமாக இது போல பதிவு செய்வார்கள். இந்த முறை வட இந்தியர்களும் கணிசமானோர் இவ்வாறு ஸ்டாலினை பாராட்டி, பதிவு செய்வதை சமூக வலைத்தளத்தில் பார்க்க முடிகிறது.
திராவிட கட்சிகள் கொள்கை
பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட ஜாதிகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பது திராவிட கட்சிகளில் விடாப்பிடி கொள்கையாக இருக்கிறது. இதன் காரணமாகத்தான் பிற மாநிலங்களை ஒப்பிட்டால் அனைத்து ஜாதி பிரிவினரும் சரிசமமாக வளர்ச்சி அடைந்து மேலே வர முடிகிறது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி , சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் போன்றவை வடமாநிலங்களில் சமூக நீதி மீது சற்று அக்கறை உடைய காட்டக்கூடிய கட்சிகளாக உள்ளன. அதை தவிர்த்துவிட்டு பார்த்தால், மற்ற பெரிய கட்சிகள் அந்தந்த நேரத்து பிரச்சினைகளை மட்டும் வைத்து அரசியல் செய்யக் கூடியவையாக இருக்கின்றனவே தவிர நீண்டகால தொலைநோக்குப் பார்வையுடன் சமூக நீதி என்ற கொள்கையில் பெரிய பிடிமானம் இல்லாமல் இருக்கின்றன.
கருணாநிதி, ஜெயலலிதா
எனவேதான், அகில இந்திய கோட்டா என்று சொல்லப்படக்கூடிய விஷயத்தில்கூட தமிழகத்தைச் சேர்ந்த திமுக போன்ற கட்சிகள் தான் முன்னெடுப்பு எடுக்க வேண்டிய நிலை உள்ளது. என்னதான் எதிரும் புதிருமாக இருந்தாலும் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவருமே தங்களது ஆட்சி காலத்தில் இட ஒதுக்கீடு போன்ற சமூக நீதி கொள்கைகளில் சமரசம் செய்து கொண்டதே கிடையாது. கருணாநிதி கொண்டு வந்த எத்தனையோ திட்டங்களை ஜெயலலிதா கிடப்பில் போட்டது வரலாறு. ஆனால் சமூக நீதி என்று வந்துவிட்டால் ஜெயலலிதாவும், அண்ணா மற்றும் கருணாநிதி கொள்கைகளைப் பின்பற்றினார், அந்த திட்டங்களை மேலும் மெருகூட்டினாரே தவிர கிடப்பில் போடவில்லை என்பதுதான் கடந்த கால வரலாறு.
நீட் தேர்வு இட ஒதுக்கீடு
எடப்பாடி பழனிசாமி அரசு, மத்திய பாஜக அரசு அரசுக்கு அனுசரணையாக நடந்து கொள்கிறது என்பது திமுகவின் தொடர் குற்றச்சாட்டாக இருந்த போதிலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை என்று தெரிந்ததும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்தார் எடப்பாடி பழனிசாமி. சமூக நீதி நீதி இரு கட்சிகளிலும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம் என்பதை, அரசியல் விமர்சகர்கள் சுட்டிக் காட்டியிருந்தனர்.
ஒடுக்கப்பட்டவர்களுக்கு முன்னேற்றம் தேவை
இதோ இப்போது 27% இட ஒதுக்கீடு விவகாரத்தில் பொருத்த அளவில் திமுக தனது சமூகநீதி பயணத்தில் மற்றொரு மைல்கல் தொட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் தமிழகம் மட்டுமல்லாது இந்த விவரங்கள் பெரிதாக தெரிந்திராத வட இந்தியாவை சேர்ந்த மக்களும் இப்போது பாராட்ட ஆரம்பித்துள்ளனர். ஒருபக்கம், இதர பிற்படுத்தப்பட்டோர் , தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு மத்திய அரசு பணிகளில் ஒதுக்க வேண்டிய பணியிடங்களில் பாதி மட்டும்தான் நிரப்பப்பட்டு உள்ளதாக மத்திய அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதன் காரணமாக மத்திய அரசு பணியில் சேர முடியாமல் பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மருத்துவக் கல்லூரி இட ஒதுக்கீட்டில் சமூக நீதி காப்பாற்றப்பட்டது போல, மத்திய அரசு பணியிடங்களில் நிரப்பப்படாமல் உள்ள பாதிக்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டால் அது இந்த சமுதாயத்தினரை தூக்கி விடுவதுபோல இருக்கும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பு.