"துணிவு" சீக்ரெட்.. நான் சொன்ன பிறகுதான் வினோத் அதை மாத்துனாரு.. சீமான் பகிர்ந்த சுவாரஸ்யம்
சென்னை: நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் ரிலீசுக்கு காத்திருக்கிறது. இதற்கிடையே நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் படத்தின் இயக்குநர் வினோத் குறித்து சில சுவாரசிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் துணிவு... வங்கிக் கொள்ளையை அடிப்படையில் இந்த படம் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டிரைலருக்கே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தப் படம் நாளை மறுநாள் 11ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதற்காக ஏற்கனவே மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் முன்பதிவு தொடங்கிவிட்டது. கூடவே வாரிசு திரைப்படமும் வருவதால் பொங்கல் ரேஸ் சூடு பிடித்துள்ளது.
பெரியார், அண்ணா பெயரை ஆளுநர் வாசிக்காதது பற்றி.. அதிமுக வைகைச் செல்வன் சொன்னது என்ன தெரியுமா?
துணிவு
பட ரீலிசுக்கு இன்னும் கொஞ்ச நாட்களே உள்ளதால்.. பட புரமோஷன்கள் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. ரசிகர்கள் தங்கள் பங்குக்கு கட் அவுட் வைப்பது போன்ற செயல்களில் தீவிரமாக இறங்கியுள்ளனர். பல இடங்களில் அதிகாலை நேரத்திலேயே சிறப்புக் காட்சிகளைத் திரையிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இரு இரண்டு நடிகர்களின் ரசிகர்களிடையே மோதல் ஏற்படக்கூடாது என்பதற்காகப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
சீமான்
படத்தின் இயக்குநர் ஹெச் வினோத் தொடர்ச்சியாகப் பல ஊடகங்களில் நேர்காணல் அளித்து வருகிறார். இதனிடையே இயக்குநர் வினோத் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சில சுவாரஸ்ய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாகச் சென்னையில் நடைபெற்ற வெள்ளிமலை திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வில் பேசிய சீமான், "எனது தம்பி வினோத். தீரன், நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படங்களை எடுத்துள்ளார். விரைவில் வெளியாக உள்ள துணிவு படத்தையும் எடுத்துள்ளார். அவர் முதலில் தனது பெயரை H வினோத் என்றே போடுவார்.
நான் தான் சொன்னேன்
நான் அவரிடம் "அதைத் தமிழில் மாற்றிப் போடு.. நமது அப்பாக்கள் என்ன வெள்ளைகாரங்களா.. நாம் என்ன ஆங்கிலேயர்களுக்கா பிறந்தோம்.. முதல் எழுத்தே நமது தாய் மொழியில் போடவில்லை என்றால் என்ன இது.. தமிழில் போடு" என்று சொன்னேன்.. உடனே நான் சொன்னதைக் கேட்டு மாற்றிவிட்டார். இல்லைங்க எதாவது பிச்சினை வரும் என முதலில் சொன்னார். என்ன பிரச்சினை வந்தாலும் நான் சொன்னேன். அதன் பின்னரே மாற்றினார். அதனால் தான் இப்போது துணிவு பட விளம்பரங்களில் ஹெச் வினோத் என்று வருகிறது. அதை நீங்களும் பார்த்திருப்பீர்கள்.
தமிழ் மொழி
ஒரு எழுத்தைக் கூட மாற்ற முடியாத தமிழன் எப்படி நாட்டை மாற்றவும் திருத்தவும் முடியும்.. நாக்கை திருத்த முடியாத நம்மால் எப்படி நாட்டை திருத்த முடியும். தமிழில் ஏன் பேச முடியாத! சொற்கள் இல்லையா. உலகிலேயே எந்தவொரு மொழியின் துணையும் இல்லாமல் தனித்து இயங்கக் கூடி மொழி தமிழ் தான்.. இதனால் தான் உயர் தமிழ் செம்மொழி.. அனைத்து பொருட்களும் தமிழில் சொற்கள் உள்ளன.. ஆங்கிலத்தைப் போல இல்லாமல் தமிழில் ஒவ்வொரு பொருளுக்கும் வார்த்தை உள்ளது. ஆங்கிலத்தில் வெறும் அங்கிள் மட்டும் தான். இங்குப் பெரியப்பா, சித்தப்பா, மாமா என பல உறவுகள் உள்ளன.
முதலில் தெரிந்து கொள்ளுங்கள்
ஆங்கிலத்தில் லவ் என்ற வார்த்தை மட்டுமே உள்ளது. அதேநேரம் தமிழில் அன்பு, பாசம், பரிவு, காதல், இரக்கம், நேசம் எனப் பல வார்த்தைகள் உள்ளன. அடுத்தவர் மொழியில் இருந்து வார்த்தைகளைத் திருடி உருவாக்கப்பட்ட மொழிக்கு அடிமையாக இருப்பதை என்னவென்று சொல்வது.. இங்குத் தமிழில் அனைத்திற்கும் சொற்கள் இருக்கிறது. அது தெரியவில்லை என்றால் முதலில் முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
நாங்கள் தான் மாற்றினோம்
மொழிக்கும் மதத்திற்கும் தொடர்பு இல்லை.. எங்களைப் போன்றோர் வந்த பிறகு தான்.. மதங்களில் இருக்கும் மாற்று மொழி சொற்களுக்குப் பதிலாகத் தமிழ் மொழியில் சொற்கள் வந்தன. இது போன்ற மாற்றங்களை நாங்கள் தான் கொண்டு வந்துள்ளோம். ஒரு மொழி சிதைந்து போனால்.. இனத்தை அடையாளம் காட்ட முடியாது. எனவே மொழியைக் காப்பாற்ற வேண்டியது நமது கடமை. ஆங்கிலம் படிக்க வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை.. ஆனால் அனைத்தையும் ஆங்கிலத்தில் படிக்க வேண்டாம் என்றே சொல்கிறோம். தமிழைப் பயிற்று மொழியாக்க வேண்டும்.
எதற்கு ஆங்கிலம்
நமது வரலாற்றைப் பற்றி நாம் ஏன் ஆங்கிலத்தில் படிக்க வேண்டும். ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் தான் போரிட்டார்கள். அதை ஏன் ஆங்கிலத்தில் படிக்க வேண்டும். வேளாண்மை படிப்பிற்கு எதற்கு ஆங்கிலம். இங்குக் காப்பகத்தில் இருந்த புலியை வட இந்தியாவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அங்கு அவர்கள் இந்தியில் பேசியுள்ளனர். புலிக்குப் புரியவில்லை. தமிழில் பேசிய பின்னரே புலிக்கும் புரிந்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்த சென்ற புலிக்குத் தமிழ் தான் புரிக்கிறது. எங்கள் வீட்டில் இருக்கும் கிளி கூட அருமையாகத் தமிழில் பேசும்.. ஆப்பிரிக்கன் கிளி தமிழ் பேசுகிறது. ஆனால் தமிழ் மக்களே தமிழைப் பேசவில்லை என்றால் எப்படி" என்றார்.