இலவசம் வேண்டாம் என்று கூற பிரதமர் மோடிக்கு என்ன தகுதி இருக்கு? சீமான் கடும் தாக்கு!
சென்னை: இலவசம் வேண்டாம் என்று சொல்லும் பாஜக ஏன் விவசாயிகளுக்கு ரூ.6000 பணம் வங்கிக் கணக்கில் போடுகிறார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக கட்சித் தலைமை அலுவலகத்தில் மாயோன் பெருவிழா நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர் சந்தித்து சீமான் கூறுகையில், கொடியை எப்படி பிடிக்க வேண்டும் என்று தெரியாதவர்கள் எல்லாம் கொடியைப்பற்றி பேசுகிறார்கள்.
தேசப்பற்று பற்றி பேசுகிறார்கள். நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாத்தையும் அதானியிடம் கொடுக்கிறார்கள். பிஎஸ்என்எல் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இருந்தும் பிஎஸ்என்எல் கோபுரத்தில் தனியாருக்கு ஏன் கொடுக்கப்படுகிறது என்று விமர்சித்தார்.

திமுக மீது விமர்சனம்
தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து பேசிய சீமான், தமிழகத்தில் பாஜக வந்துவிடும் என்று திமுக பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்கிறது. எதற்கெடுத்தாலுன் தான் கருணாநிதியின் மகன் என்கிறார். அதனால்தான் சந்தேகமாக இருக்கிறது. 'நான் காவடி தூக்கவா செல்கிறேன் என்கிறார். ஆனால் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக்காவடி என பாஜகவிற்கு தூக்குனவர்கள் தான் திமுகவினர்.

கச்சத்தீவு பற்றி சீமான்
கருணாநிதி மகன் எதையும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று கூறும் முதல்வர் மு.க.ஸ்டாலின், கச்சத்தீவு பறிபோனபோதும், கல்வி மத்திய பட்டியலுக்கு போனபோதும் என்ன செய்தார்? என்று கேள்வி எழுப்பினார். அதேபோல், கச்சத்தீவு மீட்கப்படும் என்று உறுதி கொடுக்கும் இடத்தில் அண்ணாமலை இல்லை. அதனை ஏற்றுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

இலவச விவாதம்
தொடர்ந்து இலவசம் குறித்து பேசிய சீமான், இலவசங்கள் வழங்கக் கூடாது என்று கூறுவதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் கல்வியை இலவசமாக வழங்கி அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தியுள்ளார்.
இலவசம் மூலம் டெல்லியில் உள்ள அரசிப் பள்ளிகளில் வளர்ச்சியை காட்டியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத்திலும் கல்வி இலவசம் என்று அனுபவப்பூர்வமாக அறிவிக்கிறார். ஆனால் குஜராத்தில் ஆட்சியில் உள்ள பாஜக, இதுவரை அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இப்போது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.

பாஜகவுக்கு தகுதியில்லை
இதுமட்டுமல்லாமல், விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வங்கிக் கணக்கில் போடுவதற்கு என்ன காரணம். அதனால் இலவசங்கள் வழங்கக் கூடாது என்று கூறுவதற்கு பாஜகவுக்கும், பிரதமர் மோடிக்கும் எந்த தகுதியும் இல்லை என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications