ஈரோடு கிழக்கில் செந்தில்முருகன் போட்டி.. வேட்பாளரை அறிவித்த ஓபிஎஸ்.. கடைசியில் வைத்த ட்விஸ்ட்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவின் ஓ.பன்னீர் செல்வம் அணி தரப்பு வேட்பாளராக செந்தில் முருகன் என்பவரை ஓபிஎஸ் அறிவித்துள்ளார். அதேபோல் பாஜக சார்பாக வேட்பாளர் அறிவிக்கப்பட்டால், தங்கள் தரப்பு வேட்பாளரை வாபஸ் பெறுவோம் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகி கொண்டே செல்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வேட்பாளரை அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்துள்ளது. ஏற்கனவே இருமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த தென்னரசு எடப்பாடி பழனிசாமி அணியின் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

ஓபிஎஸ் அணி வேட்பாளர்
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து ஓபிஎஸ் கூறுகையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவின் ஓபிஎஸ் அணி தரப்பில் செந்தில் முருகன் போட்டியிடுவார் என்று அறிவித்துள்ளார். தொடர்ந்து, செந்தில் முருகன் லண்டனில் எம்பிஏ படித்தவர். எங்கள் வேட்பாளர் செந்தில் முருகனுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஒருவேளை பாஜக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டால், எங்களது வேட்பாளரை வாபஸ் பெறுவோம். ஒருவேளை பாஜக போட்டியிடவில்லை என்றால், நிச்சயம் எங்களின் வேட்பாளர் போட்டியிடுவார் என்று தெரிவித்தார்.

இரட்டை இலை சின்னம்
தொடர்ந்து, இரட்டை இலை சின்னம் பற்றிய கேள்வி கேட்ட போது, இந்திய தேர்தல் ஆணைய ஆவணங்களின் படி இன்றுவரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக நான் தான் இருக்கிறேன். இரட்டை இலை சின்னம் கிடைப்பதற்கு எந்தக் காலத்திலும் தடையாக இருக்க மாட்டேன். ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் என்னிடம் வந்த எடப்பாடி பழனிசாமி தரப்பில் கையொப்பம் கேட்டால், ஏ மற்றும் பி ஃபார்மில் கையொப்பமிட தயாராக இருக்கிறேன். பொது வேட்பாளருக்காக இரட்டை இலை சின்னத்தில் நிச்சயமாக நான் கையொப்பமிடுவேன் என்று கூறினார்.

பாஜக பற்றி கருத்து
பின்னர் பாஜக நிலைப்பாடு பற்றிய கேள்விக்கு, நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணி பாஜக தலைமையில் இருக்கிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையை பொறுத்தவரை அதிமுக தலைமையில் கூட்டணி இருக்கிறது. ஏற்கனவே ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக பாஜகவிடம் ஆதரவு கோரினோம். பாஜகவிடம் எங்களின் பண்பாடை கூறியுள்ளோம். அவர்களின் நிலைப்பாட்டை வெளிப்படையாக கூறிய பின், பார்த்துக் கொள்வோம் என்று கூறினார்.

சசிகலாவிடம் ஆதரவு
தொடர்ந்து, தனிச் சின்னத்தில் போட்டியிட தயாராக இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு, போட்டி என்று முடிவு செய்துவிட்டால், தனிச் சின்னத்தில் போட்டியிட்டு தான் ஆக வேண்டும். உறுதியாக போட்டியிடுவேன் என்று கூறினார். பின்னர் சசிகலா பற்றிய கேள்விக்கு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலாவை சந்தித்து உறுதியாக ஆதரவு கேட்போம். அவர் பிரச்சாரத்திற்கு வருவாரா என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications