பெரிய குழப்பத்தில் இருக்கிறார் ஓபிஎஸ்.. இரட்டை இலை சின்னம் எங்களுக்கே.. கே.பி.முனுசாமி நம்பிக்கை!
சென்னை: ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவில் இல்லாதவர் என்றும், அவரது அறிவிப்புக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். குழப்பத்தில் உள்ள ஓபிஎஸ், அனைவரையும் குழப்பத்திற்கு ஆளாக்குகிறார் என்றும், நிச்சயம் இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைக்கும் என்று நம்புவதாக கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தமிழ்நாட்டின் அரசியல் கட்சியினர் பரபரப்பாக செயல்பட தொடங்கினர். திமுக கூட்டணி தரப்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு என்று அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தரப்பில் வேட்பாளர் தேர்வு, பிரச்சார திட்டம் என்று அடுத்தக்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியில் இருந்து விலகிக் கொண்டது. கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அதிமுக போட்டியிட விட்டுக்கொடுத்து விட்டதாக ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
ஜன.23ல் ஓ பன்னீர் செல்வம் முக்கிய ‛மூவ்’.. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை..ஆஹா
ஓ.பன்னீர் செல்வம் பேட்டி
இதன் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி அணி சார்பில் வேட்பாளராக யார் களமிறங்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில், ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் தங்கள் சார்பில் தனியாக வேட்பாளர் நிறுத்தப்பட உள்ளோம். அதிமுக சார்பில் தாங்கள் போட்டியிடுவோம். ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் இரட்டை இலை சின்னம் கோரி படிவத்தில் தான் கையெழுத்து போடுவேன் என்று தெரிவித்தார்.
பாஜக ஆதரவு
தொடர்ந்து, இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டால் இந்திய தேர்தல் ஆணையம் அளிக்கும் வேறு சின்னத்தில் போட்டியிடுவோம். அனைவருடனும் ஒற்றுமையாக இணைந்து செயல்பட விரும்புகிறோம். அதிமுக ஒன்று பட்டால் அனைவருக்கும் உண்டு வாழ்வு. இரட்டை இலை சின்னம் முடங்க ஒருபோதும் தான் காரணமாக இருக்க மாட்டேன். ஒருவேளை பாஜக போட்டியிட்டால், அவர்களுக்கு ஆதரவளிப்போம் என்று தெரிவித்தார்.
கே.பி.முனுசாமி பேட்டி
ஓ.பன்னீர் செல்வத்தின் அழைப்பை எடப்பாடி பழனிசாமி தரப்பு நிராகரித்துள்ளது. இதுகுறித்து அதிமுக எம்எல்ஏ-வும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருமான கேபி முனுசாமி கூறுகையில், ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவில் இல்லாதவர். அவர் அறிவிப்புக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஓ.பன்னீர் செல்வம் எவ்வளவு பெரிய குழப்பத்தில் இருக்கிறார் என்பது தெரிகிறது. முதலில் இடைத்தேர்தலில் நிற்போம் என்கிறார். பின்னர் பாஜக போட்டியிட்டால், ஆதரவளிப்போம் என்று கூறுகிறார்.
இரட்டை இலை சின்னம்
எங்களை பொறுத்தவரை நாங்கள் தெளிவாக செயல்பட்டு வருகிறோம்.அதேபோல் எங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதிமுகவில் இரு தரப்பு என்பது இல்லை. கட்சி நடவடிக்கை, நீதிமன்ற தீர்ப்பின் படி அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் மட்டுமே இயங்குகிறது என்று தெரிவித்துள்ளார்.