தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம்.. செப். மாதத்தில் பொதுக்கூட்டம்.. பரபரக்கும் ஓபிஎஸ்!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஓ.பன்னீர் செல்வம் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக கோவை செல்வராஜ் கூறியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் பரபரப்புக்கு பஞ்சமின்றி சென்று கொண்டிருக்கிறது. அதிமுக பொதுக்குழு கூட்டம் முதல் தலைமை அலுவலக சாவியை கைப்பற்றியது வரை எடப்பாடி பழனிசாமி கைகள் ஓங்கி இருந்தது. ஆனால் ஓ.பி.ரவீந்திரநாத் நீக்கம், மேல்முறையீடு, டெல்லியின் பார்வை என்று ஓ.பன்னீர் செல்வமும் சவாலளித்து வருகிறார்.

டிடிவி தினகரன்
இதனிடையே அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உடன் ஓபிஎஸ் ஆதரவாளர் சையது கான் சந்திப்பு, சசிகலாவின் சுற்றுப்பயணம் ஆகிய நிகழ்வுகள் பல்வேறு சந்தேகங்களையும் கிளப்பியுள்ளது. இதுமட்டுமல்லாமல் நீதிமன்ற வழக்குகள், தேர்தல் ஆணையம், பாஜக நிர்வாகிகளுடனான சந்திப்பு என ஓபிஎஸ் சத்தமின்றி பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

சுற்றுப்பயணம்
அதேபோல் டெல்லி மேலிடத்தின் பார்வையும் ஓ.பன்னீர் செல்வத்தின் பக்கமே இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதனால் ஓ.பன்னீர் செல்வம் அடுத்தடுத்த நகர்வுகளை வேகமாக செய்து வருகிறார். அதில் முதற்கட்டமாக தொண்டர்கள் தன் பக்கம் என்பதை நிரூபிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

கோவையில் பொதுக்கூட்டம்
தேனியில் தொடங்கி மதுரை, திருச்சி, கோவை, சென்னை என சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் போது தனது செல்வாக்கை அனைவருக்கும் நிரூபிக்கும் வகையில் ஏற்பாடுகளை மேற்கொள்ள ஓ.பன்னீர் செல்வம் அறிவுறுத்தியுள்ளார். இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் முக்கிய நம்பிக்கையாக உள்ள கோவை மாவட்டத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தவும் ஆலோசித்துள்ளார்.
Recommended Video

கோவை செல்வராஜ்
இதனை கோவையில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், வரும் 20ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை ஓபிஎஸ் தொடங்க உள்ளதாகவும், செப்டம்பர் மாதத்தில் கோவை சிதம்பரம் பூங்காவில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் அடுத்தடுத்து எடுத்து வரும் நகர்வுகளுக்கு என்ன காரணம் என்று புலப்படாமல் எடப்பாடி பழனிசாமி யோசித்து வருகிறது. இதனால் அதிமுக கூடாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications