21+15.. ‘ரெண்டே நாளில்’.. அதிரடி காட்டும் ஓபிஎஸ்.. தேர்தல் ஆணைய ஆக்ஷனுக்காக பரபர பிளான்!
சென்னை : அதிமுகவில், மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகளை நியமிக்கும் திட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளார் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம். இதற்குப் பின்னணியில், தேர்தல் ஆணைய நடவடிக்கையைக் குறிவைத்து ஓ.பன்னீர்செல்வம் இறங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்தே நீக்கிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு கூறி வரும் நிலையில், ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் ஓபிஎஸ்.
அதன்படி, கடந்த 2 நாட்களாக தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களை தொடர்ச்சியாக நியமித்து வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். கடந்த 2 நாட்களில் 36 பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் கட்சி நியமனங்களை துரிதப்படுத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவில் கொடிகட்டி பறந்த சேடப்பட்டி முத்தையா! கடைசியில் மனம் வெறுத்து வெளியேறிய கதை தெரியுமா?
வேகமெடுத்த ஓபிஎஸ் டீம் வொர்க்
எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வந்த உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இதற்கிடையே, இரு தரப்பினருமே கட்சிக்குள் தங்களது தரப்பை வலுப்படுத்தும் திட்டத்தை தீவிரமாகச் செயல்படுத்தி வருகின்றனர். பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தும் ஏற்பாடுகளில் இறங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதே நேரத்தில், கட்சி நிர்வாகிகளை நியமிக்கும் நடவடிக்கையில் ஜெட் வேகத்தில் இறங்கியுள்ளார் ஓபிஎஸ்.
எண்ட் கார்டு
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும், எதிர்தரப்பினரை மாற்றி மாற்றி கட்சியில் இருந்து நீக்குவதும், புதிதாக நிர்வாகிகளை நியமிப்பதும் தொடர்ச்சியாக நிகழ்ந்து வந்தது. இதனால், யார் கட்சியில் இருப்பது, யாருக்கு பொறுப்பு எனத் தெரியாமல் அதிமுக தொண்டர்களே குழம்பி வந்தனர். இந்த செயல்பாடு முடிவில்லாமல் போய்க்கொண்டிருந்த நிலையில், அதற்கு எண்ட் கார்டு போட்டு வைத்தது உயர் நீதிமன்றம். அதன்பிறகு ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு தரப்பிலும் அப்படியான நியமனங்கள் நடக்கவில்லை.
மீண்டும் களமிறங்கிய ஓபிஎஸ்
இந்நிலையில், மீண்டும் நியமன அறிவிப்புகளை கையில் எடுத்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அதுவும் முன்னைவிட தீவிரமாக இதில் இறங்கி இருக்கிறார் ஓபிஎஸ். சமீபத்தில் அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை அ.தி.மு.க அரசியல் ஆலோசகராக நியமித்து ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டார். சில நிமிடங்களிலேயே பண்ருட்டியாரை கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி. ஆஹா, திரும்ப ஆரம்பிச்சிட்டாங்களே என பதற்றமானார்கள் அதிமுக தொண்டர்கள்.
தலைமை கழக நிர்வாகிகள்
இந்நிலையில், அடுத்த அதிரடியாக தலைமைக் கழக நிர்வாகிகள் பட்டியல், கட்சியில் உள்ள பல்வேறு அணிகளின் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் பட்டியலை நேற்று முன் தினம் வெளியிட்டார் ஓ.பன்னீர்செல்வம். மொத்தமாக 21 பேரை முக்கியமான பதவிகளில் நியமித்து ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அமைப்புச் செயலாளர்கள்
அதன்படி, அதிமுக அமைப்பு செயலாளர்களாக மனோகரன், அஞ்சுலட்சுமி ராஜேந்திரன் ஆகியோரை நியமனம் செய்துள்ளார். தேர்தல் பிரிவு செயலாளராக சுப்புரத்தினம், மகளிரணி செயலாளராக ராஜலட்சுமி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம், கடலூர், ஈரோடு, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திண்டுக்கல், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு அதிமுகவின் புதிய மாவட்ட செயலாளர்களையும் நியமித்து ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மாவட்ட செயலாளர்கள்
இந்நிலையில், நேற்று மீண்டும் 15 பேரை முக்கிய பதவிகளில் நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். அதன்படி கரூர் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு அவைத் தலைவர், மாவட்ட செயலாளர்கள் ஆகியோரை நியமித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். மேலும், தருமபுரி மாவட்டத்தையும் கிழக்கு, மேற்கு என இரண்டாகப் பிரித்து அதற்கான மாவட்ட செயலாளர்களையும் அறிவித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
மா.செக்கள் நியமனம்
மேலும், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கும் மாவட்ட செயலாளர்களை நியமித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். சமீபத்தில் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்து ஆதரவு தெரிவித்த முன்னாள் எம்.எல்.ஏ கோவிந்தராஜ் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
21+15=36
கடந்த 2 நாட்களில் 36 பேரை புதிய நிர்வாகிகளாக அறிவித்துள்ளார் ஓபிஎஸ். முன்னாள் நிர்வாகிகள் மற்றும், தனது ஆதரவாளர்களை மீண்டும் தொடர்ச்சியாக நிர்வாகிகளாக நியமித்து வருவது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் மனுக்கள் இருக்கும் நிலையில், அதற்கான ஸ்டெப்பாகவே இதனை ஓபிஎஸ் செய்வதாகக் கூறப்படுகிறது.
என்ன திட்டம்?
தேர்தல் ஆணையத்தில் தங்கள் பலத்தை நிரூபிக்கும் வகையில், 10 லட்சம் அதிமுக உறுப்பினர்களிடம் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து பெறும் வேலையில் இறங்கியிருக்கிறது ஓபிஎஸ் டீம். அந்தப் பணியை அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே எல்லா மாவட்டங்களுக்கும் நிர்வாகிகளை ஓபிஎஸ் நியமித்து வருவதாகக் கூறப்படுகிறது.