ஓபிஎஸ் சுயநலம்.. டெல்லிக்கு போட்டுக் கொடுத்த எடப்பாடி.. அந்த ‘40 பக்க ரிப்போர்ட்’டில் இருந்தது என்ன?
சென்னை : ஓ.பன்னீர்செல்வம் செய்த வேலைக்கு அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே நீக்கலாம், அவரது கடிதத்தை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் ஆவதற்கு எடப்பாடி பழனிசாமி, அனைத்து வகைகளிலும் தயாராகி வரும் நிலையில், பொதுக்குழு கூட்டத்தை தடுப்பதற்காக தேர்தல் ஆணையத்திற்கு அதிமுகவின் குழப்பச் சூழலை விவரித்து கடிதம் எழுதியிருந்தார் ஓபிஎஸ்.
ஓ.பன்னீர்செல்வம் அனுப்பிய கடிதத்திற்கு எதிராக அடுத்த இரண்டு நாட்களில் 40 பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கையை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பினார்
எடப்பாடி பழனிசாமி.

ஒற்றைத் தலைமை விவகாரம்
அதிமுகவில் வெடித்த ஒற்றைத் தலைமை மோதலைத் தொடர்ந்து, வரும் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவைக் கூட்டி, எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் பதவிக்கு வர திட்டமிட்டு வருகிறார். இதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவை நடத்த அனுமதிக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்தையும், நீதிமன்றத்தையும் நாடினார் ஓ.பன்னீர்செல்வம். அதிமுகவில் நிகழ்ந்து வரும் தற்போதைய குழப்பமான சூழல் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையருக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விரிவான அறிக்கை ஒன்றை அனுப்பினார். அந்த அறிக்கையில் 11ஆம் தேதி பொதுக்குழு நடத்த ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இன்றி தன்னிச்சையாக முடிவு எடுக்கப்பட்டதாக ஓ.பி.எஸ் தெரிவித்து, தனது தரப்பு விளக்கங்களை அளித்தார்.

ஈபிஎஸ் விளக்கம்
ஓபிஎஸ்ஸின் அறிக்கைக்கு எதிராக பதில் அறிக்கையை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தது எடப்பாடி பழனிசாமி தரப்பு. 40 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், பொதுக்குழு கூட்டப்படுவதில் சட்ட விதிகள் எதுவும் மீறப்படவில்லை. ஓ.பன்னீர்செல்வம் அவ்வப்போது தனது நிலைப்பாட்டை மாற்றி வருகிறார். பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களும் நிர்வாகிகளும் எனக்கு ஆதரவாக உள்ளனர். பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். பொதுக்குழு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வை அங்கீகரிக்கவில்லை, அதனால் அந்த பதவிகள் காலாவதி ஆகிவிட்டன என்றும் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

கட்சி விரோத செயல்கள்
எடப்பாடி பழனிசாமி தரப்பு அளித்த அறிக்கை தொடர்பான கூடுதல் விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளன. அதன்படி ஈபிஎஸ் அளித்த பதில் அறிக்கையில், அ.தி.முக ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சி தொண்டர்களுக்கு ஏராளமான தொல்லைகளை கொடுத்து வந்தார். தனது பதவியை காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற சுயநலத்துடன் பொதுக்குழு உறுப்பினர்களை அலைக்கழித்தார். அவரது நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் கட்சி விரோத செயல்களே. பொதுக்குழு கூட்டத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்த ஓபிஎஸ், அது நடக்காமல் போகவே போலீஸ் மூலம் பொதுக்குழுவுக்கு இடையூறு ஏற்படுத்த முயற்சித்தார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தகுதி நீக்கம் செய்யலாம்
பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி மறுக்க வேண்டும் என மாநகர போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதினார். இவற்றில் அவருக்கு சாதகமாக ஒன்றுமே நடக்காததால், தனது ஆதரவாளர்களை கட்சி நலனுக்கு எதிராக தூண்டிவிட்டார். அவர்கள் மூலம் அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு எதிராக செயல்பட வைத்தார். இவை அனைத்துமே அ.தி.மு.க கட்சி விதிகளுக்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கைகள் தான். இதற்காகவே அவரை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யலாம்.

ஓபிஎஸ் விதிகளை கடைபிடிக்கவில்லை
மேலும், ஓ.பன்னீர்செல்வம் கட்சி விதிகளை கடைபிடிப்பதில் உண்மையானவராக இருந்திருந்தால் அதை அவர் பொதுக்குழு கூட்டத்தை நடத்தச் செய்து தனது செல்வாக்கை காட்டியிருக்க வேண்டும். ஆனால் பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேறுவதை தடுக்க நீதிமன்றம் சென்றார். அவர் வகித்து வந்த ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியானதற்கு அவர் தான் காரணம். ஆனால் உண்மையை மறைத்து ஒருதலைபட்சமாக தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

சட்ட விதிகளுக்கு எதிரானது
தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் எழுதிய கடிதம் கட்சி சட்ட விதிகளுக்கு எதிரானது. அதிமுகவின் தலைமைப் பதவியில் ஓ.பன்னீர்செல்வம் இல்லை. எனவே அ.தி.மு.க தொடர்பாக இனி அவரிடம் தேர்தல் ஆணையம் எந்த தகவல் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம். மேலும், ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக யார் மனு கொடுத்தாலும், அவர்களுக்கும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை என எடப்பாடி பழனிசாமியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

விதிப்படியே நடக்கிறது
அ.தி.மு.கவின் தொண்டர்கள் மத்தியில் ஓபிஎஸ் தனது செல்வாக்கை இழந்துவிட்டார். அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் அவருக்கு எதிராக இருந்ததன் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் கட்சியில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. நெருக்கடியான காலகட்டத்தில் கட்சி விதி 20ஏ (7) பிரிவின்படி நிர்வாகிகள் கட்சியை வழிநடத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படிதான் கட்சி தற்போது வழி நடத்தப்பட்டு வருகிறது என எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications