அந்த 4 பேர்.. எடப்பாடி கோட்டையில் இருந்து சீட்டுகளை உருவ திட்டம்.. இறங்கிய 3 புள்ளிகள்- நடக்குமா?
சென்னை : அ.தி.மு.கவில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி வரும் நிலையில், தனக்கு ஆதரவை அதிகப்படுத்தும் நோக்கில், எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருப்பவர்களை தனது பக்கம் இழுக்கும் முயற்சிகளில் ஓபிஎஸ் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
ஒற்றைத் தலைமை பிரச்சனையால் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இடையே மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில் இருவருமே எதிர் தரப்புக்கு எதிராக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர்.
தனது ஆதரவாளர்கள் பலரை எடப்பாடி பழனிசாமி இழுத்த நிலையில், ஈபிஎஸ் மீது அதிருப்தியில் உள்ளவர்களுடன் ஓபிஎஸ் தரப்பினர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனராம்.
"நம்பிக்கையில்லங்க".. ஃபைல்களை 12 பேரிடம் தந்து சரி பார்த்த எடப்பாடி.. வந்ததே கோபம்! கசிந்த சீக்ரெட்
தர்மயுத்தம் காலத்தில்
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த 2017ஆம் ஆண்டு சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஓ.பன்னீர்செல்வத்திற்கு, அதிமுக எம்.பிக்கள் , எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் ஆதரவளித்தனர். ஓபிஎஸ்ஸின் புரட்சிப் போர்க்கொடி அதிமுகவையே ஆட்டம்காண வைத்தது. சசிகலா தரப்பின் மீது அதிருப்தியில் இருந்த அதிமுகவின் மூத்த தலைவர்கள் மதுசூதனன், செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், ஜெயபால், பி.ஹெச்.பாண்டியன் உள்ளிட்ட பலர் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு அளித்தனர்.
இன்று எதிர் தரப்பில்
ஓ.பி.எஸ்க்கு அப்போதைய அதிமுக எம்.எல்.ஏக்கள், மாஃபா பாண்டியராஜன், ஆறுக்குட்டி, சண்முக நாதன், மாணிக்கம், மனோகரன், மனோ ரஞ்சிதம் என பத்துக்கும் மேற்பட்டோர் ஆதரவு அளித்தனர். வனரோஜா, சத்தியபாமா, ஆர்.சுந்தரம், அசோக் குமார், செங்குட்டுவன், ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, மருத ராஜா, மைத்ரேயன் உள்ளிட்ட எம்.பிக்களும் ஆதரவு அளித்தனர். ஆனால், இன்று அந்த பட்டியலில் பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமியின் பக்கம் உள்ளனர்.
தொடர்ந்து இழுக்கும் எடப்பாடி
இந்த முறை கூட கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஓபிஎஸ் ஆதரவாளர்களாக இருந்தவர்கள் பலர் கடந்த 10 நாட்களுக்குள் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களாக மாறியுள்ளனர். ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக இருந்த மாவட்ட செயலாளர்களை அடுத்தடுத்து இழுத்து தற்பொது வெறும் 5 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே ஓபிஎஸ் பக்கம் நிற்கும் நிலையை உருவாக்கினார் எடப்பாடி பழனிசாமி. ஓபிஎஸ் பக்கம் இருந்தால் எதிர்காலம் இருக்காது என ஈபிஎஸ் தரப்பினர் பேசிப் பேசியே அவர்களை தங்கள் வழிக்குக் கொண்டு வந்தனர்.
ஓபிஎஸ் முயற்சி
இந்நிலையில், ஆதரவாளர்கள் எண்ணிக்கை குறைந்து குறைந்து கட்சியில் பலத்தை இழந்துள்ள பன்னீர்செல்வம், தேர்தல் ஆணையம், நீதிமன்றங்களில் முறையிட்டு சட்டப்பூர்வ முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார். மேலும், நீதி கேட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்வதற்கும் ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளார். அதில் தனக்கு ஆதரவு அதிகம் உள்ளதாக கருதப்படும் தென் மாவட்டங்களில் இருந்து பயணத்தை அவர் தொடங்குகிறார்.
கொங்கு மண்டலத்திலும்
எடப்பாடி பழனிசாமியின் கோட்டை எனக் கருதப்படும் கொங்கு மண்டலத்தின் பல பகுதிகளுக்கும் பயணித்து தனக்கு ஆதரவு திரட்ட இருக்கிறாராம் ஓபிஎஸ். அதற்காக, எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கும் கொங்கு மண்டல நிர்வாகிகளின் பட்டியலை எடுத்து, பேச்சுவார்த்தை நடத்த தனது ஆதரவுக் கரங்களிடம் அறிவுறுத்தியுள்ளாராம். அதன்படி வைத்திலிங்கம், ஓபி ரவீந்திரநாத், கோவை செல்வராஜ் ஆகியோர் வேலைகளைத் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிரது.
மாஜிகளுடன்
கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் முன்னாள் எம்.எல்.ஏக்கள், முன்னாள் எம்.பிக்கள் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆகியோரிடம் பேசி சீனுக்கு அழைத்து வர ஓபிஎஸ் அணியினர் லிஸ்ட் போட்டு பணியாற்றி வருகிறார்களாம். இந்த முயற்சியில் அவர்களுக்கு சாதகமான விளைவுகள் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில்
தர்மயுத்தம் காலத்தில் கொங்கு மண்டலத்தின் சேலம் மாவட்டத்தில் 24 முன்னாள் எம்.எல்.ஏக்கள் ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தனராம். ஆனால், எடப்பாடி பலத்தை நிரூபித்த பிறகு அவர்களில் பலர் அந்தப் பக்கம் சாய்ந்துவிட்டனர். 4 பேர் மட்டும் இப்போது யாருக்கும் ஆதரவு இன்றி ஒதுங்கி இருந்து வருகின்றனராம். அவர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சிகளிலும் ஓபிஎஸ் தரப்பு தீவிரமாக ஈடுபட்டு வருகிறதாம்.
முன்னிற்கும் ஓபிஎஸ் தரப்பு
ஓபிஎஸ் தரப்பின் முயற்சிகளை அடுத்து எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களும் அவர்களுடன் பேசி வருகின்றனராம். தேனியில் இருந்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஆட்களை தங்கள் பக்கம் தூக்கிய நிலையில், எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏக்களை தன் பக்கம் இழுத்தால் தனக்கு மைலேஜ் கூடும் என ஓபிஎஸ் நினைப்பதால் ஓபிஎஸ் தரப்பு இந்த வேலையில் முன்னிற்கிறதாம்.