இன்று குஜராத் பறக்கிறார் ஓபிஎஸ்.. 3 தலைகளையும் சந்திக்க திட்டம்? ‘ட்விஸ்ட்’! பரபரக்கும் அதிமுக!
சென்னை : அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இன்று மாலை குஜராத் செல்ல இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குஜராத்தில் பாஜகவின் முக்கிய தலைவர்களை சந்திக்க ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர் செல்வம் இடையே மோதல் போக்கு உள்ளது. இருவரும் தனித்தனி அணிகளாகச் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை குஜராத் செல்ல இருக்கிறார். குஜராத் செல்லும் ஓ.பன்னீர்செல்வம் நாளை நடைபெறும் முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளார்.
குஜராத்தில் பாஜக பெற்ற வரலாற்று வெற்றிக்கு வாழ்த்துச் சொல்லி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோருக்கு தனித்தனிதாக ஓபிஎஸ் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

குஜராத் தேர்தல்
குஜராத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 8ஆம் தேதி எண்ணப்பட்டன. இதில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் ஆளும் பாஜக 156 இடங்களில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி வெறும் 17 ஒடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 5 இடங்களிலும் வென்றது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து 7-வது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது பாஜக.

நாளை பதவியேற்பு
குஜராத்தில் இமாலய வெற்றிக்குப் பிறகு ராஜினாமா செய்த குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், நேற்று நடைபெற்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மீண்டும் அந்தப் பதவிக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பூபேந்திர படேல் நாளை முதல்வராகப் பதவியேற்கிறார். பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

குஜராத் செல்லும் ஓபிஎஸ்
இந்நிலையில், குஜராத் முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை குஜராத் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக, தேனியில் இருந்து சற்று முன்பு சென்னை வந்துள்ளார் ஓபிஎஸ்.

சொந்த ஊரில் இருந்து
ஓரிரு நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான பெரியகுளம் சென்று, அங்கு தனது ஆதரவாளர்களைச் சந்தித்து வந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னைக்கு கிளம்பினார். தேனியில் இருந்து கார் மூலம் மதுரை வந்து அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் ஓபிஎஸ். முன்னதாக, ஓபிஎஸ் மதுரை விமான நிலையத்திற்கு வந்தபோது, அவரை ஏராளமான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்றனர்.

பாஜக தலைவர்களைச் சந்திக்க
குஜராத் முதல்வர் பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர் கலந்து கொள்ளும் நிலையில், அவர்களைச் சந்தித்துப் பேசவும் ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், ஓபிஎஸ்ஸின் இந்த குஜராத் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இடைக்கால பொதுச் செயலாளர் சர்ச்சை
சமீபத்தில், டெல்லியில் நடந்த ஜி20 ஆலோசனை கூட்டத்திற்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எனக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்ததற்கு கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்திருந்த ஓ.பன்னீர்செல்வம், இன்று குஜராத் செல்லவிருப்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓபிஎஸ் - ஈபிஎஸ்
டெல்லிக்கு எடப்பாடி பழனிசாமியை பாஜக அரசு அழைத்ததற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார் ஓபிஎஸ். தற்போது குஜராத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பு நிகழ்விற்கு ஓபிஎஸ, ஈபிஎஸ் இருவருக்குமே அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் குஜராத் செல்லவிருக்கிறார். ஈபிஎஸ் சார்பாக யார் செல்லப்போவது என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

நாளை வழக்கு விசாரணை
அதிமுக பொதுக்குழு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது. இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த விளக்க மனு ஆகியவை குறித்தும் உச்ச நீதிமன்றம் நாளை விரிவாக விசாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஓபிஎஸ், பாஜக தலைவர்களை சந்திக்க உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications