பாஜகவுக்கு ‘ஐடியா’வே இல்ல.. ஓபிஎஸ் இழுத்து விடுறார்.. மூல காரணமே அவர் தானாம்.. மாஜி சொல்லும் சேதி!
ஓபிஎஸ் சுயநலத்தால் அதிமுகவில் பிரச்சனையை ஏற்படுத்துவதாக தளவாய் சுந்தரம் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை : எதற்கு எடுத்தாலும் பாஜகவை வம்புக்கு இழுத்து விடுகிறார் ஓபிஎஸ். பாஜகவுக்கு நான் ஆதரவு கொடுக்கிறேன் என்கிறார். ஆனால், பாஜக எங்கள் உட்கட்சி விவகாரத்தைப் பற்றி பேசவே இல்லை என எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி பாஜக ஆர்வம் காட்டாத நிலையில், ஓ.பன்னீர்செல்வம், பாஜகவை களத்தில் இறக்கிவிட பகீரத பிரயத்தனங்களைச் செய்து வருகிறார்.
ஓபிஎஸ்ஸின் இந்த முயற்சி எடப்பாடி பழனிசாமி அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருவதாகச் சொல்லப்படும் நிலையில், ஓபிஎஸ்ஸை விமர்சித்துள்ளார் ஈபிஎஸ் அணியின் தளவாய் சுந்தரம்.
மீண்டும் வண்டியை ஈரோட்டுக்கு விட்ட ஈபிஎஸ்.. உங்க பூத்ல நிலவரம் என்ன? பொறுப்பாளர்களுடன் மீட்டிங்!
பலமுனை போட்டி
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆனந்த் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் போட்டியிடுகிறார். இந்த இடைத்தேர்தலில் இப்படி பலமுனை போட்டி நிலவுகிறது. அதிமுக சார்பில், ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரு அணிகளும் களமிறங்குவதாக அறிவித்துள்ளன. ஆனால், அதிமுகவின் இரு அணிகளின் சார்பிலும் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
வேட்பாளர் யார்?
இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தொடர்ந்து தத்தம் ஆதரவாளர்களோடு ஆலோசனை நடத்தி வருகின்றனர். இருவருமே நூற்றுக்கும் மேற்பட்டவர்களை தேர்தல் பணிக்குழுவில் நியமித்துள்ளனர். எனினும், ஓபிஎஸ் அணி, இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு சறுக்கலைச் சந்திக்க விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. அதை உறுதி செய்யும் விதமாக ஓபிஎஸ் அணியினர், பாஜகவை களமிறக்கி விடுவதற்காகவே காய் நகர்த்தி வருகின்றனர்.
முட்டி மோதிய ஓபிஎஸ்
ஓ.பன்னீர்செல்வம் தங்கள் அணி போட்டியிடும் என்று அறிவித்த போதே பாஜக போட்டியிட்டால் அவர்களுக்கு ஆதரவளிப்போம் என்று தெரிவித்தார். தொடர்ந்து அண்ணாமலையிடமும் இதே விஷயத்தை தெரியப்படுத்திய நிலையில், குஜராத்திற்கு சென்றும், பாஜக இந்த இடைத்தேர்தலில் களமிறங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், பாஜகவோ இதில் ஆர்வம் காட்டவில்லை. எங்கள் குறி நாடாளுமன்றத் தேர்தல் தான், இந்த இடைத்தேர்தலில் நாங்கள் வலிமையைக் காட்ட வேண்டிய அவசியமில்லை, ஆளுங்கட்சி பண பலத்தைக் காட்டும் என தெரிவித்திருந்தார்.
விடாத ஓபிஎஸ் டீம்
ஆனாலும், ஓபிஎஸ் அணி விடவில்லை. 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அறிவித்த பின்னரும் கூட, பாஜக தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்தால், உடனடியாக ஓ.பன்னீர்செல்வம் வேட்பாளரை அறிவிப்பார். பாஜக போட்டியிட விரும்பினால், எங்கள் தேர்தல் பணிக்குழுவினர் பாஜகவிற்காகப் பணியாற்றுவார்கள் என்று ஓபிஎஸ் அணியின் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார். இப்படி ஆரம்பம் முதலே ஒவ்வொரு விஷயத்திலும் பாஜகவை இழுத்துவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளது ஓபிஎஸ் அணி. இதனை எடப்பாடி அணியைச் சேர்ந்த தளவாய் சுந்தரம் விமர்சித்துள்ளார்.
நாடறிந்த உண்மை
முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளரும், கன்னியாகுமரி எம்.எல்.ஏவுமான தளவாய் சுந்தரம் நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இரட்டை இலை சின்னம் வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது. ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவின் எடப்பாடி அணி போட்டியிடுவது உறுதி என்பது நாடறிந்த உண்மை. அதில் எந்தவிதமான குழப்பமும் கிடையாது. ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை அவர் இந்தக் கட்சியை விட்டு நீக்கப்பட்டுவிட்டார். அவருக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவராக ஏதாவது பேசிக்கொண்டு திரிகிறார்.
பாஜகவை இழுக்கிறார்
ஏற்கெனவே அதிமுக ஆட்சி இருக்கக்கூடாது என்று சட்டமன்றத்தில் எதிர்த்து வாக்களித்தார். அதற்கு அடுத்தாற்போல் இரட்டை இலை சின்னத்தை முடக்கினார். எனவே, இதுபோன்ற செயல்களில் ஓபிஎஸ் ஈடுபடுவது நாடறிந்த உண்மை. இரட்டை இலை சின்னத்தை முடக்கும் வேலையைத்தானே பன்னீர்செல்வம் செய்துகொண்டிருக்கிறார். எதற்கு எடுத்தாலும் பாஜகவை வம்புக்கு இழுக்கிறார் ஓபிஎஸ். பாஜகவுக்கு நான் ஆதரவு கொடுக்கிறேன் என்கிறார். பாஜக எங்கள் உட்கட்சி விவகாரத்தைப் பற்றி பேசவே இல்லை. ஓபிஎஸ் தான் அதிமுக இரட்டை இலைச் சின்னத்தை முடக்கியவர். தர்ம யுத்தத்தை ஆரம்பித்தவர், ஓபிஎஸ் தான் சுயநலவாதி. அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளுக்கு பாஜக காரணமல்ல. ஓபிஎஸ் தான் காரணம் எனத் தெரிவித்தார்.
அவர் ஒருவர் தான்
மேலும் பேசிய அவர், ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, ஒவ்வொரு கட்சித் தலைவர்களாகச் சந்தித்து ஆதரவு கேட்பது முறை. அந்த வகையில் எதிர்க்கட்சிகள் எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஆதரவு கொடுத்தாலும் மகிழ்ச்சி, கொடுக்காவிட்டாலும் மகிழ்ச்சி. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கூடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு அதிமுக சார்பில் ஓ.பி.ரவீந்திரநாத்தை அழைத்திருக்கிறார்கள். அவர் ஒருவர்தான் எம்.பி-யாக இருக்கிறார், அவரை நாங்கள் கட்சியிலிருந்து ஏற்கெனவே நீக்கி விட்டோம். அவர் ஒருவர் மட்டும் இருப்பதால் அவரை அழைத்திருக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.