காத்திருந்த ஓபிஎஸ்.. கரெக்டா வந்த புள்ளிகள்- அதை வைத்தே ‘தலை’களை பார்த்து.. டெல்லியில் என்ன நடக்கும்?
சென்னை : அதிமுகவில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் மோதல் முற்றிவரும் நிலையில், பாஜக மேலிடத்தின் ஆதரவைப் பெறும் முயற்சிகளில் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபடத் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
Recommended Video
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பலம் குறைந்து வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் நேற்று இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுக பொதுக்குழு
பரபரப்பான சூழ்நிலையில் அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் இடையேயான மோதல் வெளிப்படையாகவே நடந்தது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டனர். இதனால், ஓ.பன்னீர்செல்வம் கடும் கோபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், முக்கிய நிர்வாகிகளும், பொதுக்குழு உறுப்பினர்களும் பெரும்பான்மையாக எடப்பாடி பழனிசாமி பக்கமே இருப்பதால் ஓ.பன்னீர்செல்வம் அடுத்து என்ன செய்வது எனத் திட்டமிட்டு வருகிறார்.

டெல்லி பயணம்
இந்நிலையில், நேற்று இரவு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் தேனி எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் குமார், மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்.பி கோபாலகிருஷணன் உள்ளிட்டோரும் டெல்லி சென்றுள்ளனர். முன்னதாக ஓ.பி.எஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பா.ஜ.க. கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்பு வேட்புமனு தாக்கல் செய்கிறார். இந்த நிகழ்வுக்கு வருமாறு பா.ஜ.க அழைப்பு விடுத்தது. அதனால் டெல்லி செல்கிறேன் எனத் தெரிவித்தார்.

ஒற்றைத் தலைமை
ஒற்றை தலைமை விவகாரம் மற்றும் அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு செல்வீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு ஓ.பன்னீர்செல்வம் எந்தவித பதிலும் அளிக்கவில்லை. அதேநேரம், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை ஓ.பன்னீர்செல்வம் சந்திக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

போராடிய ஓபிஎஸ்
அதிமுகவில், முன்னணி நிர்வாகிகள் பலரும், கிட்டத்தட்ட 90 சதவிகித பொதுக்குழு உறுப்பினர்களும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களாகவே இருப்பதால் பொதுக்குழுவை எடப்பாடி பழனிசாமி முழு கட்டிப்பாட்டில் வைத்திருந்தார். அதனாலேயே, பொதுக்குழுவுக்கு தடை பெறவும், புதிய தீர்மானங்களை கொண்டு வரக் கூடாது என தடை பெறவும் கடுமையாகப் போராடினார் ஓபிஎஸ். மேல்முறையீட்டில் தீர்ப்பு ஓபிஎஸ்-க்கு சாதகமாக வந்ததால் நேற்று ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. ஆனால், அடுத்த பொதுக்குழு ஜூலை 11ஆம் தேதி நடக்கும் என எடப்பாடி தரப்பினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக தலைவர்கள்
இந்நிலையில், தனக்கு கட்சிக்குள் ஆதரவு குறைந்துவிட்டதால், எடப்பாடி பழனிசாமி தரப்பினரை ஆஃப் செய்ய என்ன வழி என்பது குறித்து பொதுக்குழு கலைந்ததுமே தனது வீட்டில் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போதுதான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசினர். அப்போது அவர்கள், பாஜக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தருமாறும் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது வருமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆதரவு தேடி
இதையே காரணமாக வைத்து டெல்லி சென்று பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்துப் பேசி, தனக்கு சாதகமான ஏற்பாடுகளை செய்து விடலாம் என ஓ.பி.எஸ் தரப்பினர் கணக்குப் போட்டுள்ளனர். இதையடுத்து, உடனடியாக டெல்லி கிளம்பவும் ஆயத்தமாகினர். அங்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடியிடம்
அப்போது, பிரதமர் மோடியிடம், நீங்கள் கூறியதால்தான் மீண்டும் அதிமுகவில் இணைந்து ஒருங்கிணைப்பாளர் பதவியை ஏற்றுக் கொண்டேன். தற்போது எனது பதவிக்கும், எதிர்காலத்துக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து தன்னை ஓரங்கட்டவும் பொதுச் செயலாளராக வரவும் எடப்பாடி திட்டமிட்டுள்ளார். அதனால் இரட்டைத் தலைமையே தொடர்ந்து நீடிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமியிடம் பேச வேண்டும் எனக் கோரிக்கை வைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

கட்சி சின்னம்
மேலும், டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில், அதிமுகவில் தற்போது நடைபெற்று வரும் பிரச்சனைகள் குறித்து மனு அளிக்கவும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் பொதுக்குழு நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றினால் கட்சிச் சின்னம், கொடியை முடக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் இப்போதே மனு அளிப்பார் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications