என்னை கேட்காமல் எந்த முடிவும் வேண்டாம் ப்ளீஸ்! சபாநாயகருக்கு கோர்ட் தீர்ப்பை சுட்டிக்காட்டிய ஓபிஎஸ்!
சென்னை: சட்டப்பேரவையில் அதிமுக குழு உறுப்பினர்களை மாற்ற வேண்டும் என யாரேனும் மனு அளித்தால், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தன்னிடமும் ஆலோசனை நடத்துமாறு சபாநாயகர் அப்பாவுவுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த விவகாரத்தில் தன்னை கேட்காமல் எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என சபாநாயகருக்கு ஓபிஎஸ் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனிடையே அக்டோபர் 17ஆம் தேதி அன்று எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றாக அருகருகே சட்டசபையில் அமர வைக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதிமுக பிரச்சனை
அதிமுகவில் யார் பெரியவர் என்ற அதிகார மோதல் நடைபெற்று வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் எதிரும் புதிருமாக முட்டி மோதி வருகின்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை தேர்வு செய்து அது தொடர்பான கடிதத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு சபாநாயகர் அப்பாவுவிடம் ஏற்கனவே வழங்கியுள்ளது. இதனிடையே அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்குகளை சுட்டிக்காட்டி ஓபிஎஸ் சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

2வது முறை கடிதம்
ஏற்கனவே ஜூலை மாதம் சபாநாயகருக்கு ஓபிஎஸ் கடித எழுதியிருந்த நிலையில் இன்று மீண்டும் 2வது முறையாக கடிதம் எழுதியிருக்கிறார். அதில் அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது பற்றி விலாவரியாக எடுத்துக் கூறியிருக்கிறார். அத்துடன் இந்த விவகாரத்தில் தன்னை கேட்காமல் எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என சபாநாயகருக்கு ஓபிஎஸ் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சபாநாயகர் முடிவு
இந்த விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய சூழலில் இருவரது கடிதங்கள் குறித்தும் பரிசீலித்து வரும் அவர், விரைவில் இதன் மீது முக்கிய முடிவெடுப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு மத்தியில் அக்டோபர் 17ஆம் தேதி அன்று எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றாக அருகருகே சட்டசபையில் அமர வைக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

புறக்கணிக்க முடிவு
ஒரு வேளை தனது கோரிக்கையை சபாநாயகர் ஏற்காவிட்டால் சட்டசபை கூட்டத் தொடரை புறக்கணிக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் இன்னும் ஓரிரு நாட்களில் இது தொடர்பாக சட்டசபை செயலகத்தில் முக்கிய முடிவு எடுக்க வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications