டெல்லியில் சீக்ரெட் மூவ்.. சீனியர் லாயர் ‘ர’.. அந்த தவறை செய்யக்கூடாது.. காய்நகர்த்தும் ஓபிஎஸ் மகன்!
சென்னை : முந்தைய தீர்ப்பை நிலைநாட்ட முடியாமல் ஓபிஎஸ் தரப்பு தோற்றதற்கு காரணமே, வழக்கறிஞர்கள் விஷயத்தில் சில முக்கியமான மூவ்களை ஓபிஎஸ் எடுக்காததே என அவருக்கு நெருக்கமான முக்கிய புள்ளிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி, முக்கியமான வழக்கறிஞர்களை, பல லட்சம் கொடுத்து ஆஜராக வைத்த நிலையில், ஓவர் கான்ஃபிடன்ஸாக வழக்கை எதிர்கொண்டது தவறு எனச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு செல்லும்போதாவது, ஓபிஎஸ் சுதாரித்துக்கொள்ள வேண்டும் என அவர்கள் அட்வைஸ் கூறியுள்ளனராம்.
இதனால், 'ர'வில் தொடங்கும் பெயர் கொண்ட ஒரு முக்கியமான வழக்கறிஞரை, அமர்த்துமாறும் அறிவுரை சொல்லப்பட்டுள்ளதாம். அதை நோக்கி ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் சில முக்கியமான வேலைகளை டெல்லியில் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

அதிமுக சிக்கல்
ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் தனி நீதிபதி ஜெயச்சந்திரன் பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பளித்திருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி செய்த மேல்முறையீட்டில் உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்து தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது ஓ.பன்னீர்செல்வம் அணி.

டெல்லி ஆதரவு யாருக்கு?
டெல்லியின் ஆதரவைப் பெறுவதில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பெரும் போராட்டமே நடந்து வருகிறது. ஓபிஎஸ் மகனும் எம்.பியுமான ரவீந்திரநாத், பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர்களிடம் தொடந்து தொடர்பில் இருந்து, தங்களுக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்த முயன்றார். அதற்கு, டெல்லியின் கண்ணசைவும் கிடைத்திருப்பதாகவே கூறப்பட்டது. அதன் அடிப்படையில் அரசியல் ரீதியாக சில நகர்வுகளைச் செய்து வந்தார் ஓபிஎஸ்.

ஈபிஎஸ்ஸூம் விடவில்லை
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமான இரண்டு மணியான முன்னாள் அதிமுக அமைச்சர்கள் சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் முகாமிட்டு, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட பாஜகவின் முக்கிய புள்ளிகள் சிலரைச் சந்தித்ததாக தகவல்கள் வந்தன. இந்தச் சந்திப்பு, ரகசியமாக ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் கூறப்பட்டது. அவர் மூலமாகவே சில விஷயங்கள் தொடர்பாக காய் நகர்த்துவதற்கு ஈபிஎஸ் திட்டமிட்டு அந்த 2 புள்ளிகளையும் டெல்லிக்கு அனுப்பி வைத்தார் என்கிறார்கள்.

வழக்கறிஞர்கள்
எடப்பாடி பழனிசாமி தனக்கு சாதகமான தீர்ப்பை பெறுவதற்கு வழக்கறிஞர்கள் விஷயத்தில் அவர் செய்த காரியங்கள் தான் மிக முக்கியமான காரணம் என ஓபிஎஸ்ஸிடம், சில சட்ட வல்லுநர்களும், நெருக்கமான புள்ளிகளும் தெரிவித்துள்ளனர். அரிமா சுந்தரம், சி.எஸ்.வைத்தியநாதன், விஜய் நாராயண் ஆகிய பெரிய வழக்கறிஞர்களை தன் பக்கம் அமர்த்தியது, நீதிமன்றத்தில் பெரிய இன்ஃபிளுயன்ஸ் கொடுத்திருக்கிறது எனக் கூறியுள்ளனர்.

மிஸ் பண்ணிட்டோம்
சட்ட பாயிண்ட் நம் பக்கம் இருக்கிறது, முந்தைய தீர்ப்பும் நம் பக்கம் வந்தது என ஓவர் கான்ஃபிடண்ட் ஆக இருந்தது தவறு. நீங்களும் கொஞ்சம் கூட யோசிக்காமல், ஹை ரேட்டட் வழக்கறிஞர்களை கொண்டு வந்து இறக்கியிருக்க வேண்டும், டெல்லியில் செல்வாக்கு மிக்க வழக்கறிஞர்களின் உதவி இருப்பது பல வகைகளிலும் நல்லது, அதை தவறவிட்டிருக்கக் கூடாது எனக் கூறியுள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் இந்த தவறை நாம் செய்யக்கூடாது என ஓபிஎஸ்ஸிடம் அவர்கள் கூறியுள்ளனர்.

சீனியர் - ‘ர’
இதனால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமாரை ஆஜராக வைப்பதற்கான வேலைகளில் ஓபிஎஸ் தரப்பு ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் ஆஜரான மூத்த வழக்கறிஞரான ரஞ்சித்குமாரிடம் ஓபிஎஸ் தரப்பு பேசி வருவதாகக் கூறப்படுகிறது.

பாஜக அமைச்சர்
மேலும், ஓபிஎஸ் மகன் ஓபி ரவீந்திரநாத் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜுவை சமீபத்தில் மீண்டும் ஒருமுறை டெல்லியில் சந்தித்துப் பேசியதாகவும் தகவல் வெளியானது. இந்தச் சந்திப்புக்குப் பின்னணியில், பாஜகவின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகள் தாண்டி வழக்கறிஞர்கள் தொடர்பான பேச்சு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மேல்முறையீட்டு வழக்கில் ஈபிஎஸ்ஸுக்கு கடுமையாக ட்ஃப் கொடுக்க ஓபிஎஸ் தயாராகிவிட்டார் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications