“104” - தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு இல்லையா? அப்ப ஏன் இந்த நம்பர் - பாயிண்டை பிடித்த ஓபிஎஸ்
சென்னை: தமிழ்நாட்டில் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்று தெரிவித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவசர உதவி எண்ணை அறிவித்ததன் மூலமாக தட்டுப்பாடு இருப்பது உறுதியாகி உள்ளது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவல் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. புதுச்சேரியில் காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதைபோல், தமிழ்நாட்டிலும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அரசு மருத்துவமனைகள் மருந்து, மாத்திரைகளுக்கு எவ்வித தட்டுப்பாடுகள் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மா.சுப்பிரமணியன் பேட்டி
இது தொடர்பாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், "தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடே இல்லை. ஒருவேளை மருந்து தட்டுப்பாடு இருந்தால், புகாரளிப்பதற்காக 104 என்ற எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எண் மூலம் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மருந்து தட்டுப்பாடு
இந்த நிலையில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாட்டில் பரவி வரும் காய்ச்சல் தொடர்பாகவும், மருந்துகள் தட்டுப்பாடு தொடர்பாகவும் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், "ஜிப்மர் மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு இருந்தது போல் தமிழ்நாட்டிலும் மருந்து தட்டுப்பாடு இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

ஏன் இந்த எண்?
தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு இல்லை என்று மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டாலும், மருந்து தட்டுப்பாடு குறித்த புகார்களுக்கு 104 என்ற எண்ணை அரசு அறிமுகம் செய்திருப்பதாக கூறுகிறார். இதிலிருந்தே மருந்து தட்டுப்பாடு நிலவுவது என்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டு இருக்கிறது.

பள்ளிகள் விடுமுறை
'ப்ளூ' காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில், பள்ளிகளுக்கு சிறிது காலம் விடுமுறை அளிக்குமாறு அறிக்கை வெளியிட்டு இருந்தேன். ஆனால், அமைச்சர் அவர்களோ பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கத் தேவையில்லை என்றும், அனைத்தும் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றும் தெரிவித்து இருந்தார். ஆனால், 'ப்ளூ' காய்ச்சலைத் தொடர்ந்து டெங்கு காய்ச்சலும் செப்டம்பர் மாதத்தில் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக தகவல் வருகிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications