ஓபிஎஸ்க்கு ஜெ. மீது உண்மையான பற்று இருந்தால் இதைதான் செய்யணும்- முன்னாள் சகாவுக்கு முனுசாமி அட்வைஸ்!
சென்னை : ஓபிஎஸ்க்கு அதிமுக மீது விஸ்வாசம் இருந்தால், ஜெயலலிதா மீது உண்மையான பற்று இருந்தால் ஈபிஎஸ்க்கு வழிவிட்டு ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
ஜானகி அம்மையார், எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சியை ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தது போல் ஓபிஎஸ் கட்சியை விட்டு ஓதுங்கி ஈபிஎஸ்ஸிடம் ஒப்படைக்க வேண்டும் என அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் 51வது ஆண்டு தொடக்க விழாவை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றனர்.

கே.பி.முனுசாமி
தர்மயுத்த காலத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக அவருடன் நின்ற முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி, அதிமுகவில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையேயான மோதல் கடுமையாக எழுந்த பிறகு, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராக மாறினார். கடந்த ஜூன் மாதம் முதல் ஓ.பி.எஸ்ஸை கடுமையாகச் சாடிப் பேசி வருகிறார் முனுசாமி. இதனால், ஓபிஎஸ் தரப்பினரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.

அதிமுக பொதுக்கூட்டம்
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் அண்ணா சிலை அருகில் அதிமுக சார்பில் 51வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம், முன்னாள் அமைச்சரும் ஆரணி சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் ராமசந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி பங்கேற்றார்.

உண்மையான பற்று இருந்தால்
இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக துணை பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி, "1989ல் தன்னுடைய கணவர் எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சியை வழிநடத்த ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தார் ஜானகி அம்மையார். அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கட்சி மீது விஸ்வாசம் இருந்தால் ஜெயலலிதா மீது உண்மையாக பற்று இருந்தால் அதிமுகவை எடப்பாடி பழனிசாமியே தலைமை தாங்கி வழி நடத்தட்டும் என்று ஓதுங்கி கொள்ள வேண்டும்.

திமுக எதிர்ப்பு
கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பே கருணாநிதியை எதிர்த்து தான் அதிமுக உருவானது. கருணாநிதி, அண்ணாவின் கொள்கையை மறந்ததற்காக தலைவர்களை ஒதுக்கியதற்காக அவரை எதிர்த்து தான் அதிமுக உருவானது. அதிமுக கொள்கையே திமுகவை எதிர்ப்பது மட்டும் தான் என்று மு.க.ஸ்டாலினே கூறியுள்ளார். அதிமுகவோடு இணக்கமாகச் செயல்படுபவர் அதிமுகவுக்கு தலைமை தாங்க முடியாது" எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications