ஸ்கெட்ச் சேகருக்கு இல்ல சௌந்தரு.. ‘சைலண்ட் கேம் ஆடும் ஓபிஎஸ் டீம்’.. வேலை வேகமா நடக்குதாம்!
சென்னை : ஓ.பன்னீர்செல்வம் விடுத்த அழைப்பை எடப்பாடி பழனிசாமி ஏற்காத நிலையில், ஈபிஎஸ் ஆதரவாளர்களை ஈர்க்கும் வேலையில் சைலண்டாக ஈடுபட்டு வருகிறது ஓபிஎஸ் டீம்.
Recommended Video
இணைந்து செயல்படுவோம் என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்து, ஈபிஎஸ் தரப்பினரை லேசாக அசைத்துப் பார்த்துள்ளதாம். ஈபிஎஸ் இதனை ஏற்காவிட்டாலும், சில நகர்வுகள் தொடங்கியுள்ளன என்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து முரண்டு பிடிப்பதை விரும்பாத சிலர், ஓபிஎஸ் தரப்பினரோடு பேசி வருவதாகவும், விரைவில் பலர் ஓபிஎஸ் அணிக்குத் தாவக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக, ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலருக்கும் அசைன்மெண்ட் தரப்பட்டுள்ளதாம். இது எந்தளவுக்கு வேலை செய்கிறது என்பது சில நாட்களில் தெரியவரும்.
அடேங்கப்பா.. இது லிஸ்ட்லயே இல்லயே - டெல்லிக்கு ஓபிஎஸ் அனுப்பப்போகும் கடிதம்.. எடப்பாடிக்கு
பழைய பதவியே நீடிக்கிறது
ஈபிஎஸ் தரப்பு நடத்திய பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை 11 அன்று நடந்த பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23க்கு முன்னர் இருந்த நடைமுறையே தொடரும் என்று உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து தற்போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவே ஓ.பன்னீர்செல்வம் நீடிக்கிறார். இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி நீடிக்கிறார்.
மீண்டும் முறையீடு
இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளது. அதன் மீது ஓ.பன்னீர்செல்வமும் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதேசமயம் இந்த தீர்ப்பை வாய்ப்பாக பயன்படுத்தி கட்சியில் தனக்கான செல்வாக்கை நிலைநாட்டுவதில் ஓபிஎஸ் காய் நகர்த்தி வருகிறார்.
இறங்கிச் சென்ற ஓபிஎஸ்
தனக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்த நிலையில், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என அழைப்பு விடுத்தார் ஓ.பன்னீர்செல்வம். பழைய கசப்புகளை மறந்து செயல்படுவோம், நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்.. இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். அதிமுகவை வலுவான இயக்கமாக கொண்டு வருவோம், மீண்டும் ஆட்சிக்கு வர உழைப்போம் என அழைப்பு விடுத்தார் ஓபிஎஸ்.
நிராகரித்த ஈபிஎஸ்
சசிகலா, டிடிவி.தினகரன் உள்ளிட்ட அனைவரையும் ஒருங்கிணைத்து கட்சியை வழி நடத்துவோம் என்று எடப்பாடி பழனிசாமிக்கு மெசேஜ் கொடுத்திருந்தார் ஓபிஎஸ். ஆனால் இந்த அழைப்பை எடப்பாடி பழனிசாமி நிராகரித்தார். உழைக்காமல் பதவி மட்டும் வேண்டும் என்று நினைக்கிறார். உயர் பொறுப்பில் இருப்பவர் அநாகரிகமாக நடந்து கொண்டால் எப்படி இணைந்து பணியாற்ற முடியும் என்று பன்னீர்செல்வத்துக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்தார்.
எடப்பாடி மறுத்தாலும்
ஓபிஎஸ்ஸின் ‘இணைந்து செயல்படுவோம்' என்ற அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி நிராகரித்தாலும் கூட, அவரது ஆதரவாளர்களில் சிலரே, நாமும் கொஞ்சம் இறங்கிச் செல்லலாம், மீண்டும் பேசிப் பார்ப்போம், கட்சி எதிர்காலம் முக்கியம் எனப் பேசியதாகத் தெரிகிறது. ஆனாலும், ஈபிஎஸ்ஸின் மனது சிறிதும் மாறவில்லை என்கிறார்கள்.
வேலை தீவிரம்
இந்நிலையில் தான், ஓபிஎஸ் தரப்பு, ஈபிஎஸ் வசமிருக்கும் பொதுக்குழு உறுப்பினர்களை தங்கள் பக்கம் ஈர்க்கும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளது. பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு மிகவும் அவசியம் என்பதால், பெரிய அளவில் பொதுக்குழு உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஓபிஎஸ் தரப்பினர் ஈடுபட்டு வருகிறார்களாம். இதற்காக முக்கிய நிர்வாகிகளுக்கு அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
அணி மாறும் புள்ளிகள்
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்து வந்த வேடசந்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் ஓ.பன்னீர்செல்வத்தை பெரியகுளம் இல்லத்தில் நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற ஓபிஎஸ்ஸின் அழைப்பை தொடர்ந்து பலரும் ஓபிஎஸ் ஆதரவு நிலையை எட்டலாம் எனக் கூறப்படுகிறது.
ஸ்கெட்ச் யாருக்கு
இணைந்து செயல்படுவோம் என ஓபிஎஸ் சொன்ன மெசேஜை எடப்பாடி பழனிசாமி ஏற்காமல் போனாலும், அவர் பக்கம் இருக்கும் நிர்வாகிகள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். எங்களுடன் பேசி வருகிறார்கள், விரைவில் பல மாவட்டங்களில் இருந்தும் பொதுக்குழு உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் எங்கள் பக்கம் வருவார்கள் எனக் கூறுகிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.
தொண்டர்கள் ஏற்கவில்லை
எடப்பாடி பழனிசாமி பேச்சை, கட்சியின் அடிமட்டத் தொண்டர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்து பொதுக்குழு உறுப்பினர்கள் எங்களை நோக்கி வர இருக்கிறார்கள். இன்னும் ஒரு வாரத்தில் அதை நீங்கள் பார்ப்பீர்கள் என ஓபிஎஸ்ஸின் வலது கையும், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கமும் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.