நான் உங்கள் வீட்டுப் பிள்ளை.. அண்ணே தெரியாம நடந்துருச்சு! எடப்பாடி வீட்டு கதவை தட்டும் ஓபிஎஸ் டீம்!
சென்னை : அதிமுகவில் உயர் நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்திருக்கும் நிலையில் ஓபிஎஸ் பக்கம் இருக்கும் நிர்வாகிகள் தற்போது எடப்பாடி பழனிச்சாமியை தொடர்பு கொண்டு அவருக்கு ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதிமுகவின் ஒற்றை தலைமையான முன்னாள் முதல்வர் மற்றும் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு இரு அணிகளாகப் பிரிந்து இருந்த ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சசிகலாவுக்கு எதிராக ஒன்றாக இணைந்தனர்.
ஆட்சிக்குத் தேவையான எம்எல்ஏக்கள் ஆதரவு அப்போது ஓ.பன்னீர் செல்வத்துக்கு இருந்த நிலையில் துணை முதல்வர் பதவி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை கொடுத்திருந்தார் எடப்பாடி பழனிச்சாமி.

அதிமுகவில் மோதல்
இதனால் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் 4 ஆண்டு காலம் ஆட்சியை நடத்தியதோடு கட்சியிலும் தனது செல்வாக்கை வெகுவாக வளர்த்துக் கொண்டார். அதன் முடிவு அதிமுக பொது குழு கூட்டத்தில் வெளிப்படையாக தெரிந்தது. கொங்கு மண்டலத்தில் மட்டுமே இருந்த தனது செல்வாக்கை படிப்படியாக வடக்கு மேற்கு கிழக்கு என தமிழகம் முழுவதும் விரிவுபடுத்திய எடப்பாடி பழனிச்சாமி தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்கும் அளவுக்கு வளர்ந்து வந்திருக்கிறார் என்றால் அது சாதாரண விஷயம் இல்லை என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.

ஓ.பன்னீர்செல்வம்
இப்படி ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சக நிர்வாகிகள் ஆதரவோடு ஓரம் கட்டும் அளவுக்கு வந்ததற்கு ஒரே காரணம் தன்னை எதிர்க்கிறார் என்பதுதான். அதே நேரத்தில் ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுகவில் நான்தான் என நினைத்திருந்த ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடியின் வளர்ச்சியை அவ்வளவாக விரும்பவில்லை. இதை அடுத்து இரண்டாவது தர்மயுத்தம் தொடங்கி இருக்கிறார். தேர்தல் ஆணையம், நீதிமன்றம் என அடுத்தடுத்து சட்டப் போராட்டங்களை தொடங்கிய ஓபிஎஸ்-க்கு கடந்த சில நாட்களில் ஆதரவு வட்டம் பெருகி வந்தது.

எடப்பாடி பழனிச்சாமி
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் அவருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததால் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வானது செல்லும் என கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு தாவிய முன்னால் எம்எல்ஏக்கள் ஒன்றிய செயலாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்களும் ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்து விடலாமா என சிந்தித்து வருகின்றனர்.

பேச்சுவார்த்தை துவக்கம்
சிலர் மட்டுமே அதற்கான யோசனையில் இருந்தாலும் பலர் பேச்சுவார்த்தையை துவங்கி விட்டனர் எனவும் தங்கள் மாவட்டத்தில் இருக்கும் மாவட்ட செயலாளர்கள் முன்னாள் அமைச்சர்களை தொடர்பு கொண்டு அவசரத்தில் தெரியாமல் முடிவு எடுத்து விட்டோம் எடப்பாடி அணியில் எப்போதும் இருப்போம் என உறுதி கூறி இணைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். கட்சியில் பெரும்பான்மை இருந்தபோதே நம்மை விட்டு சென்றவர்கள் பிற்காலங்களில் அணிமாற தயங்க மாட்டார்கள் என்பதனை உணர்ந்துள்ள எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அதே நேரத்தில் அவர்களை முற்றிலும் புறக்கணிக்காமல் தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கும் வகையில் யூகங்களை வகுத்து வருகிறது .












Click it and Unblock the Notifications