பண்ருட்டியார் வீட்டில் ‘மேப்' போட்ட ஓபிஎஸ்.. 1 மணி நேரம்.. நிர்வாகிகளுடன் பரபர ஆலோசனை! என்ன நடந்தது?
சென்னை : சென்னை, அசோக் நகரில் உள்ள பண்ருட்டி ராமச்சந்திரன் இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று இரவு அவசர ஆலோசனை நடைபெற்றது. தேனியில் இருந்து நேற்று சென்னை வந்த ஓபிஎஸ், உடனே பண்ருட்டியாரின் வீட்டுக்குச் சென்று ஆலோசனை நடத்தினார்.
சென்னை வேப்பேரி ஒய்.எம்.சி.ஏ திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் 88 மாவட்ட செயலாளர்கள், 100 தலைமை நிர்வாகிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். புதிய நிர்வாகிகள் அறிமுகப்படுத்தப்பட்டு, முக்கிய தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இரட்டை இலை சின்னத்தையே முடக்க.. ஓபிஎஸ்
ஓபிஎஸ் - ஈபிஎஸ்
ஒற்றைத் தலைமை மோதலால் அதிமுக ஓபிஎஸ் அணி - ஈபிஎஸ் அணி என்று இரண்டாக பிரிந்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழு நடத்தி நிர்வாகிகளை நியமித்து கட்சிக் கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ஓபிஎஸ் தனது தரப்பில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்டச் செயலாளர்களை நியமனம் செய்து வந்தனர். ஒன்றிய செயலாளர்களும் நியமிக்கப்பட்டு வந்தனர். தமிழகம் முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களை திரட்டி இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார் ஓபிஎஸ்.
மா.செக்கள் ஆலோசனை கூட்டம்
அதிமுகவின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது என அறிவித்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். சென்னை வேப்பேரியில் ரிதர்டன் சாலையில் இருக்கும் ஒய்எம்சிஏ மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் தொடங்க உள்ளது.
தேனியில்
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ் பண்ணை வீட்டில் கடந்த ஓரிரு நாட்களாக, இந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்பான ஆலோசனை நடந்து வருகிறது. இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தேனியில் இருந்து நேற்று சென்னை திரும்பினார் ஓபிஎஸ். சென்னை வந்ததும், பசுமை வழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் முக்கியமான ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார் ஓபிஎஸ்.
ஓபிஎஸ் அவசர ஆலோசனை
இன்றைய மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றன. ஓபிஎஸ் அதிமுகவில் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் சில அதிரடிகளை அரங்கேற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது வீட்டில் ஆலோசனையை முடித்துக்கொண்டு, அதிமுக ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் வீட்டுக்குச் சென்றார் ஓ.பன்னீர்செல்வம். அவருடன் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் சென்றனர்.
பண்ருட்டியார் வீட்டில்
சென்னை அசோக் நகரில் உள்ள பண்ருட்டி ராமச்சந்திரன் இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவசர ஆலோசனை நேற்று இரவு நடைபெற்றது. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து இறுதி முடிவு எடுப்பதற்காக ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
சட்டச் சிக்கல்?
சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மேலும் பல்வேறு விஷயங்கள் பற்றி ஆலோசித்ததாக கூறப்படுகிறது. அதிமுகவில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த இடைக்கால தடை இருப்பதால், தற்போது ஆலோசனைக் கூட்டம் நடத்துவதால் சட்டச் சிக்கல் ஏற்படுமா என்பது பற்றியும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
போட்டி பொதுக்குழு
ஏற்கெனவே எடப்பாடி பழனிசாமி நடத்திய பொதுக்குழுவை உயர் நீதிமன்றம் அங்கீகரித்துள்ளதால், தன் தரப்பிலும் போட்டி பொதுக்குழுவை நடத்துவது குறித்து இன்றைய கூட்டத்தின்போது முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பொதுக்குழுவில் ஜெயலலிதாவை நிரந்தர பொதுச்செயலாளர் என அறிவிக்கவும், அதிமுகவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் வழிநடத்துவது உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றவும் ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.