அதுக்குள்ள மனசு மாறிட்டீங்களா? சைலண்ட் மோடுக்கு போன ‘தலைகள்’! கடுப்படித்த ஓபிஎஸ்! அவ்வளவு தானா?
சென்னை : அதிமுகவில் தற்போதைக்கு எடப்பாடி பழனிச்சாமியின் கைகள் ஓங்கி இருக்கும் நிலையில் இவ்வளவு நாட்களாக ஓ.பன்னீர்செல்வத்துடன் நெருக்கம் காட்டி வந்த பல்வேறு நிர்வாகிகள் திடீரென எடப்பாடி பக்கம் தாவி விட்டதாகவும், பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டால் கூட எடுத்துப் பேசவில்லை என்பதால் ஓ பன்னீர்செல்வம் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறுகின்றனர் தேனி ரத்தத்தின் ரத்தங்கள்.
அரசியல் ஆதரவு காற்று எப்போது யார் பக்கம் வீசும் என்பதை கணிக்க முடியாது என்பதற்கு அதிமுகவில் தற்போது நடைபெற்று வரும் நிகழ்வுகளே உதாரணம் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ பன்னீர் செல்வத்துக்கு உயர் நீதிமன்ற ஒற்றை நீதிபதியின் தீர்ப்பு காரணமாக திடீரென ஆதரவு அதிகரித்த நிலையில் தமிழகம் முழுவதிலும் இருந்து முன்னாள் மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் ஏன் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட ஆதரவு கொடுத்தார்.

அதிமுக விவகாரம்
இதனால் அடுத்து அதிமுக ஓபிஎஸ் கையில் தான் என அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக இருந்த நிலையில் உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு செய்தார். எதிர்பார்த்தது போலவே எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கும் ஆதரவாக தீர்ப்பு வந்ததால் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்பதோடு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டதும் ஆர்பி உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், கேபி முனுசாமி ஆகியோர் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதும் சட்டப்படி செல்லத்தக்கதாக ஆகிவிட்டது.

எடப்பாடி பழனிச்சாமி
மேலும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக இருந்த மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட சுமார் 100 பேரை எடப்பாடி பழனிச்சாமி நீக்கி வெளியிட்ட அறிவிப்பும் சட்டப்படி செல்லும் இதனால் அதிமுகவின் ஒட்டு மொத்த அதிகாரமும் எடப்பாடி பழனிச்சாமியின் கையில் வந்திருக்கும் நிலையில் அவரது ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர் அதே நேரத்தில் எடப்பாடி தரப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு சென்ற நிர்வாகிகள் மீண்டும் எடப்பாடி தரப்புக்கு சென்று விடலாமா என தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ பன்னீர்செல்வத்துக்கு முழுக்க முழுக்க ஆதரவாக இருந்த முக்கிய நிர்வாகிகளை தவிர பிறரை கட்சியில் சேர்த்துக் கொள்ளலாம் என எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு இருந்தாலும், முழு மனதாக அதனை அவர் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என்கின்றனர் சேலம் நிர்வாகிகள். காரணம் கட்சியின் ஒட்டுமொத்த அதிகாரம் தன்னிடம் இருக்கிறது என தெரிந்த போதே ஓ.பன்னீர்செல்வத்திடம் சென்றவர்கள் மீண்டும் தங்கள் அணிக்கு வந்தால் வருங்காலங்களில் செல்ல மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் என யோசித்து வருகிறார்.

கடும் அதிருப்தி
இதனால் இரு தலைக் கொல்லி எறும்பாக என்ன செய்வதென்று புரியாமல் தவிக்கின்றனர் சில நிர்வாகிகள். இதனிடையே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்துவதற்காகவும் சசிகலா சந்திப்பு நிகழ்ச்சி குறித்தும் பேசுவதற்காக சில நிர்வாகிகளை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தொடர்பு கொண்டு பேச முயன்று இருக்கின்றனர்.ஆனால் அவர்கள் அழைப்பு எடுக்காமலும் சிலர் அண்ணன் வெளியே சென்று இருக்கிறார் என உதவியாளர்களை வைத்து பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஓபிஎஸ் கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications