ஓபிஎஸ்ஸின் அடுத்த அதிரடி.. 7 அக்கவுண்டையும் ‘ஃப்ரீஸ் பண்ணுங்க’ - ரிசர்வ் வங்கிக்கு பரபர கடிதம்!
சென்னை : அதிமுகவின் 7 வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, அதிமுகவின் புதிய பொருளாளராக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டார்.
கட்சியின் வங்கிக் கணக்குகளை இனி திண்டுக்கல் சீனிவாசன் கையாள வங்கிகள் ஒப்புக்கொண்டதையடுத்து, ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
நேரம் பார்த்து இப்படி நடக்கணுமா? ஓரம் கட்டப்பட்டாரா ஓபிஎஸ்.. டெல்லி போகாதது ஏன்? காரணமே வேறாம்!
ஓபிஎஸ் நீக்கம்
அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பின்னர், ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இருந்து நீக்க சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் அவர் வகித்து வந்த பொருளாளர், அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்தும் எடப்பாடி பழனிசாமியால் அதிரடியாக நீக்கப்பட்டார்.
பொருளாளர் சீனிவாசன்
அதிமுகவின் புதிய பொருளாளராக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டார். அதிமுகவின் புதிய பொருளாளர் நியமனம் தொடர்பாக கரூர் வைஸ்யா, இந்தியன் வங்கி மேலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார். அதில் அதிமுகவின் வரவு செலவு கணக்குகளை திண்டுக்கல் சீனிவாசன் மேற்கொள்வார் எனத் தெரிவித்திருந்தார்.
ஓபிஎஸ் கடிதம்
இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் வங்கி கணக்கு இருக்கும் கரூர் வைஸ்யா வங்கி மேலாளருக்கு கடிதம் அனுப்பினார். அதில் இந்திய தேர்தல் ஆணையத்தின்படி இன்று வரை தான் தான் ஒருங்கிணைப்பாளர், தான் தான் பொருளாளர், நீதிமன்றத்தில் வழக்குகள் இருக்கும்போது என்னை கேட்காமல் எந்தவித வரவு செலவு கணக்கையும் மேற்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தினார். மீறி வரவு செலவு கணக்கை மேற்கொண்டால் வங்கி மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஓபிஎஸ் எச்சரித்தார்.
ஓபிஎஸ்ஸை நிராகரித்த வங்கி
அதிமுக வங்கிக் கணக்குகள் தொடர்பாக ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் மாறிமாறி வங்கிகளுக்கு கடிதம் எழுதியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுகவின் வங்கி கணக்குகளைக் கையாள புதிய பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு முழு அதிகாரம் என்ற எடப்பாடி பழனிசாமியின் கடிதத்தையும், அவர் இணைத்திருந்த ஆதாரங்களையும் வங்கிகள் ஏற்றுக்கொண்டன.
ஓபிஎஸ் ரிசர்வ் வங்கிக்கு கடிதம்
வங்கிகள் தனது கடிதத்தை நிராகரித்த நிலையில், ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். அதிமுகவின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டது சட்டவிரோதம், தேர்தல் ஆணையத்தின்படி தற்போது நான் தான் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர். எனவே, வேறு யார் கையெழுத்தையும் வங்கிகள் ஏற்கக்கூடாது.
7 கணக்குகள்
வங்கிக் கணக்குகள் தவறாக கையாளப்படுவதை தவிர்க்க அதிமுகவின் வங்கி கணக்குகளை முடக்கி வைக்க வேண்டும் என சென்னை மண்டல ரிசர்வ் வங்கி இயக்குனருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். முடக்கி வைக்க வேண்டிய அதிமுகவின் கணக்குகளாக, கரூர் வைஸ்யா வங்கி, ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி உட்பட 7 கணக்குகளின் விவரங்களையும் ரிசர்வ் வங்கிக்கு அளித்துள்ளார் ஓபிஎஸ்.